பதிவு செய்த நாள்
28 அக்2021
21:24
மும்பை:இந்தியாவில் தங்கத்தின் தேவை, மீண்டும் கொரோனா காலத்துக்கு முந்தையை நிலைமைக்கு திரும்பி உள்ளது என, ‘உலக தங்க கவுன்சில்’ தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு பின், நடப்பு சீசனில் தங்க விற்பனை களைகட்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் தேவை, கொரோனா காலத்துக்கு முந்தைய நிலைக்கு திரும்பி உள்ளது.கடந்த செப்டம்பர் காலாண்டில் தேவை 47 சதவீதம் அதிகரித்து, 139.1 டன் ஆக அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பு
பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது மற்றும் நுகர்வோர் தேவை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது ஆகியவை காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வளர்ச்சி போக்கு வரும் காலத்திலும் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை 94.6 டன் ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 139.1 டன் ஆக அதிகரித்துள்ளது.
மதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, நடப்பாண்டு செப்டம்பர் காலாண்டில் 59 ஆயிரத்து 330 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 43 ஆயிரத்து 160 கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய தலைமை செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் இருந்த மிக குறைவான அடிப்படை நிலை ஒரு காரணம். அடுத்து வர்த்தகம் சாதகமான நிலைக்கு திரும்பியது, நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்தது ஆகியவற்றை சொல்லலாம்.
இறக்குமதியை பொறுத்தவரை, அடுத்த காலாண்டிலும் அதிகரிக்கும் என சொல்ல முடியாது. பண்டிகை கால தேவைக்காக ஏற்கனவே தேவையான அளவுக்கு வாங்கி, ‘ஸ்டாக்’ வைக்கப்பட்டுவிட்டது.நாடு முழுக்க கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப் பட்டு வருகின்றன. சில்லரை தேவைகளும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி திரும்புகிறது.பண்டிகை காலம், திருமண காலம் ஆகியவற்றை ஒட்டி, தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
மறுசுழற்சி
கொரோனா துவங்கியதிலிருந்து பார்த்தால், இந்த சீசனில் தான் தங்கத்தின் விற்பனை சுறுசுறுப்பாக இருக்கிறது.டிஜிட்டல் தங்கத்திற்கான தேவையும் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, ‘ஆன்லைன்’ வாயிலாக தங்கம் வாங்குவதும் அதிகரித்துள்ளது.இந்த மதிப்பீட்டு காலத்தில், தங்கத்தை மறுசுழற்சி செய்வது 50 சதவீதம் குறைந்துள்ளது. இது, நுகர்வோர் தங்கத்தை விற்பனை செய்வதை விட, வைத்துக் கொள்ள விரும்புவதையே காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|