பதிவு செய்த நாள்
31 அக்2021
19:05
பொருட்களை வாங்கிய பின் பணம் செலுத்த வழி செய்யும் ’பை நவ் பே லேட்டர்’ எனும் பி.என்.பி.எல்., பணம் செலுத்தும் முறை, பயனாளிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் இந்த வசதியை அதிகம் நாடுகின்றனர். எளிதான குறுகிய கால கடனாக அமையும், இந்த முறையில் பணம் செலுத்தும் வசதியை நிதி நுட்ப நிறுவனங்கள், இ-–காமர்ஸ் நிறுவனங்கள் தவிர, முன்னணி வங்கிகளும் வழங்கத் துவங்கியுள்ளன. பி.என்.பி.எல்., வசதியை பயன்படுத்துபவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
எளிய கடன் வசதி:
‘ஷாப்பிங்’ செய்பவர்கள் பணம் செலுத்தாமல் விரும்பிய பொருட்களை வாங்கி, குறிப்பிட்ட காலத்திற்கு பின் பணம் செலுத்த பி.என்.பி.எல்., முறை வழி செய்கிறது. இந்த குறுகிய கால கடன் வசதிக்கு, 15 முதல் 45 நாட்கள் வரை வட்டி இல்லா காலம் அமைகிறது. 500 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
என்ன வாங்கலாம்?
அண்மை காலத்தில் நிதி நுட்ப நிறுவனங்கள் தவிர, ‘அமேசான், பிளிப்கார்ட்’ ஆகிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இந்த வசதியை அளிக்கத் துவங்கியுள்ளன. ‘கேட்ஜெட்’கள், ஆடைகள், மளிகை பொருட்கள் என பல வகை பொருட்களை வாங்கி பின்னர் பணம் செலுத்தலாம். டிக்கெட் பதிவும் செய்து கொள்ளலாம்.
என்ன பயன்?
‘கிரெடிட் கார்டு’ இல்லாதவர்கள், தேவையான பொருட்களை வாங்கி பின்னர் பணம் செலுத்தலாம். கிரெடிட் வரலாறு போன்றவையும் ஒரு பிரச்னை அல்ல. ஆனால், சலுகை காலத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும்; இல்லை எனில் வட்டி கட்ட வேண்டும். தாமத கட்டணமும் விதிக்கப்படலாம்.
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டு போன்றது என்றாலும், பி.என்.பி.எல்., வசதியில் சில வேறுபாடுகள் உண்டு. கிரெடிட் கார்டை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம். பி.என்.பி.எல், வசதியை பங்குதாரர் நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், கிரெடிட் கார்டு போல இதற்கு தகுதி வரம்புகள் இல்லை.
கவனம் வேண்டும்:
பொருட்களை வாங்கிவிட்டு, தவணை முறையில் பணத்தை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடிவது சாதகமானது. தேவையான பொருட்களை வாங்க இது உதவும். ஆனால், சரியாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். சிறிய தொகை என்பதால், கடனில் வாங்குவது ஒரு பழக்கமாக மாறினால் சிக்கல் தான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|