பதிவு செய்த நாள்
03 நவ2021
22:00
புதுடில்லி:கடந்த அக்டோபரில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த பத்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது.
‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த அக்டோபரில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘ ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 58.4 புள்ளிகளாக உயர்வை கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில் 55.2 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்.
50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். அக்டோபரில் இக்குறியீடு, 58.4 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது. சேவைகள் துறை, தொடர்ந்து மூன்றாவது மாதமாக வளர்ச்சியை கண்டு வருகிறது. நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக விரைவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால், பத்தரை ஆண்டுகளில் இல்லாத வகையில் வளர்ச்சி வலுப்பெற்றுள்ளது.
மேலும், வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.கடந்த அக்டோபரில் சேவை துறையை சேர்ந்த நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளன.இருப்பினும், சமீபத்திய தரவுகள், இந்திய சேவைகளுக்கான சர்வதேச தேவை பலவீனமாக இருப்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
புதிய ஏற்றுமதி வணிகம், அக்டோபரில் குறைந்துள்ளது. இது, கொரோனா பரவலில் இருந்து வழக்கமாக இருக்கும் போக்காகும்.சேவைகள் துறை மற்றும் தயாரிப்பு துறை ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை, கடந்த செப்டம்பரில் 55.3 ஆக இருந்தது, அக்டோபரில் 58.7 ஆக அதிகரித்துள்ளது.இது, கடந்த 2012 ஜனவரியிலிருந்து பார்க்கும்போது மிக அதிகளவிலான மீட்சியாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|