பதிவு செய்த நாள்
07 நவ2021
21:26
என் மகனுடைய வீட்டுக் கடனை அடைப்பதற்கு, என் சேமிப்புக் கணக்கிலிருந்து என் மகன் வங்கி அக்கவுன்டுக்கு 5 லட்சம் ரூபாய் டிரான்ஸ்பர் செய்யலாமா?
எம்.ஜி. நட்ராஜ், வடபழநி.
செய்யலாம். நீங்கள் உங்கள் மகனுக்குத் தரும் பணம், ‘பரிசு’ என்றே கருதப்படும். அதனால், அதற்கு ஏதும் வரிப் பிடித்தம் கிடையாது. உங்கள் மகனும் ஏதும் வரி செலுத்த வேண்டாம்.
‘செஸ்ட் மணி’ போன்றவற்றில் இருந்து நான் கடன் வாங்கலாமா?
ஸ்ரீனிவாச ராஜா, வாட்ஸ் ஆப்.
கிரெடிட் கார்டு இல்லை; ஆன்லைனில் பொருட்களை உடனே வாங்க வேண்டும் என்றெல்லாம் அவசரத் தேவை இருந்தால் மட்டும் இது போன்ற ‘ஆப்’களை பயன்படுத்துங்கள். மற்றபடி நான் இந்த விஷயத்தில் ஒரு பழைய பஞ்சாங்கம். கையில் பணம் இருந்தால் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பது என் ஆலோசனை. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், விதவிதமான கடன் வலைகளில் சிக்கி, எண்ணற்ற குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன; வந்து கொண்டு இருக்கின்றன. ஜாக்கிரதை!
என்.சி.டி.,யில் முதலீடு செய்யலாமா?
பாலாஜி, சேலம்.
நன்கு விபரம் தெரிந்து முதலீடு செய்யுங்கள். பெரு நிறுவனங்கள் தங்கள் பணத் தேவைகளுக்காக, பெருந்தொகையை இது போன்ற என்.சி.டி., எனும், ‘நான் கன்வர்டிபிள் டிபெஞ்சர்’ வழியாக திரட்டும். இத்தகைய என்.சி.டி.,களில், கிரெடிட் ரேட்டிங் முக்கியம். அந்நிறுவனங்களின் கடன் சுமை எத்தகையது என்பது தெரிய வேண்டும்.
பாதிப்பு ஏற்பட்டால் தாங்கக்கூடிய அளவுக்கு ‘கேப்பிடல் அடிக்குவசி ரேஷியோ’ உள்ளதா; வாராக்கடனைச் சமாளிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். முடிந்தவரை ‘செக்யூர்டு’ என்.சி.டி.,யில் முதலீடு செய்யுங்கள். நல்ல ரேட்டிங் உள்ள என்.சி.டி.,க்களே மூழ்கிப் போயுள்ளன என்பதால், வழக்கமான வைப்பு நிதித் திட்டத்தை விட, என்.சி.டி.,க்களில் ரிஸ்க் அதிகம் என்பது ஞாபகமிருக்கட்டும்.
என் வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்படலாம் என்பதை நான் எப்படி தெரிந்துகொள்வது?
செல்வகோபெருமாள், மின்னஞ்சல்.
நாளிதழ்களைப் பாருங்கள். ஆறு மாதத்துக்கு ஒரு முறை, உங்கள் வங்கி என்ன வட்டி விகிதத்தில் புதிய வீட்டுக் கடன் கொடுக்கிறது என்று கவனித்து வாருங்கள். பல சமயங்களில் வங்கிகளே தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்து, விபரம் தெரிவிக்கும். சில சமயம், புதிய வீட்டுக் கடனுக்கு மட்டுமே சகாய வட்டி விகிதம் வழங்கப் படும். அது போன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் வங்கியை அணுகி, குறைவான வட்டி விகிதத்துக்கு மாற்றிக்கொள்ள என்ன கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து, மாற்றிக் கொள்ளுங்கள்.
அரசு ஒப்புதல் அளித்த எட்டு மாடி கட்டடத்திற்கு மேலாக, 10 மாடி குடியிருப்பு கட்டும் ரியல் எஸ்டேட்டில் வீடு வாங்கலாமா? பிற்காலத்தில் அரசின் வாயிலாக எதும் நடவடிக்கை எடுத்தால், என் நிதிக்கு உத்தரவாதம் உண்டா?
கே.சிவகுமார், பெங்களூரு.
எட்டு மாடி கட்டுவதற்கு ஒப்புதல் உள்ளது என்றால், அதற்குள் ‘பிளாட்’ வாங்கலாம். அதற்கு மேல் உள்ள ஒன்பது மற்றும் 10வது மாடிகள் ஒப்புதல் பெறப்படாதவை என்பதால், அங்கே வாங்க வேண்டாம்.ஒப்புதல் பெறாத மாடிகளை எழுப்புவதால், ஒப்புதல் பெறப்பட்ட மாடிகளுக்கு எந்த நேரடிச் சிக்கலும் இல்லை. ஆனால், மறைமுகச் சிக்கல் உண்டு. ஒருவேளை வருங்காலத்தில், மேலே உள்ள மாடிகளை இடிப்பதற்கான உத்தரவு வருமேயானால், அது, கட்டுமானத்தில் விரிசல்களை ஏற்படுத்தலாம்.
என் கணவர் என்னை விட்டு பிரிந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. நான் 10 ஆண்டுகள் வேலை பார்த்தேன். என் மாமனார் என்னை சப்போர்ட் செய்தார். அவர் ஓய்வு ஊதியம் வாங்குகிறார். அவருக்கு ஒரு மகளும் உண்டு. என் மாமனார், அவர் காலத்திற்கு பின் ஓய்வு ஊதியத்தை எனக்கு எழுதி வைக்க விருப்பம். அவர் மகளுக்கு இதில் முழு சம்மதம். இப்படி செய்ய முடியுமா?
லதா, சென்னை.
முடியாது. குடும்ப ஓய்வூதிய பலன் என்பது, ஓய்வூதியம் பெற்று மறைந்தவரது கணவன் அல்லது மனைவி அல்லது மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கே போய் சேரும். திருமணமாகாத அரசு ஊழியர் என்றால், குடும்ப ஓய்வூதிய பலன், அவரது தந்தை அல்லது தாய்க்குப் போய் சேரும். நீங்கள் மருமகள்; உங்களுக்கு மாமனாரது குடும்ப ஓய்வூதிய பலன் வழங்கப்பட வாய்ப்பில்லை.
என் தாய் பெயரில், ‘ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் 1,800 ஷேர் வாங்கி இருந்தோம். என் தாய் 2017ல் ‘நாமினி’ போடாமல் காலமாகி விட்டார். நீதிமன்றத்துக்குச் சென்று வாரிசு சான்றிதழ் வாங்கி வந்தால், ஷேர் தொகை தருகிறேன் என்று சொல்கின்றனர். இது சரியா?
ஜி. ராம்குமார், மின்னஞ்சல்.
சரியே. சட்ட ரீதியாக யார் வாரிசுதாரர் என்பதை உறுதி செய்து கொள்வது, அந்த நிறுவனத்துக்கு அவசியம். வேறு எவரேனும் நாளை பிரச்னை எழுப்பினால், அந்நிறுவனம் நீதிமன்ற படியேறி அலைய முடியாது அல்லவா?
‘ஆன்லைன்’ திருட்டு, ஏமாற்றல்களை 100 சதவீதம் தவிர்ப்பதற்கு என்ன வழி?
எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரம்.
எந்த வங்கியும் அழைத்து, உங்களுடைய ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு’ விபரங்களையும், கடவுச் சொற்களையும், எண்களையும் கேட்பதில்லை. இவற்றை யார் கேட்டாலும், அவர்கள் மோசடிக்காரர்கள் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். இணையம் முழுக்க பணத்தாசை பிடித்த திமிங்கிலங்கள் உலவுகின்றன. நீங்கள் சிறிய தவறேனும் செய்ய மாட்டீர்களா என்று காத்திருக்கின்றனர். 100 சதவீத பாதுகாப்பு என்பது, நீங்கள் 100 சதவீதம் உஷாராக இருப்பதிலேயே இருக்கிறது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|