பதிவு செய்த நாள்
14 நவ2021
19:38
சந்தையின் ஏறுமுகமான போக்கு தொடரும் நிலையில், முதலீட்டாளர்கள் மனதில் எழும் முக்கிய கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.
பங்குச் சந்தையில் இளம் முதலீட்டாளர்களும், புதிய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கின்றனர். சந்தையின் நிலையும் இதற்கு ஆதரவாக அமைந்துள்ளது. சந்தையின் ஏறுமுகம் ஈர்ப்புடையதாக அமைந்தாலும், பெரும்பாலான முதலீட்டாளர்கள், பங்குகளை விற்று லாபம் பார்ப்பதற்கான தருணம் இதுவா எனும் கேள்வியை தீவிரமாக பரிசீலிக்கின்றனர்.
இதன் துணை கேள்வியாக, பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபத்தை எப்படி முதலீடு செய்வது எனும் சிந்தனையும் பலருக்கு இருக்கிறது. சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில், சரிவு மூலம் திருத்தம் நிகழலாம் எனும் அச்சம் அல்லது எதிர்பார்ப்பு இதற்கான அடிப்படையாக அமைகிறது.
பகுதி விலக்கல்
பொதுவாக சந்தையின் நிலையை வைத்து முதலீடு முடிவை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகிறது. சந்தையை சரியாக கணிக்க முடியாது என்பதே இதற்கு காரணம். தற்போதைய சூழலிலும் கூட, ஏறுமுகமான போக்கு நீண்ட காலமாக தொடர்வதால், விரைவில் திருத்தம் ஏற்படலாம் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், இந்த நிலை தொடரும் என்று வல்லுனர்களில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
சந்தையில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதால், உடனடியாக திருத்தம் நிகழாது என்கின்றனர். மேலும் வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் விலகினாலும், உள்நாட்டு நிதி கழக முதலீட்டாளர்களின் முதலீடு, பெரும் சரிவை தடுத்து நிறுத்தும் என்றும் கருதுகின்றனர்.
உள்நாட்டு பொருளாதாரமும் மீண்டு வருவதால், சந்தையின் ஏறுமுகம் தொடர வாய்ப்பு இருப்பதாகவே கருதுகின்றனர். ஏறுமுகமான போக்கு தொடரலாம் என்றாலும், ஓரளவு லாபம் பார்ப்பது பொருத்தமான உத்தியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். சந்தையின் தொடர் ஏறுமுகம் காரணமாக சம பங்குகளின் விகிதம் அதிகமாக இருந்தால், பகுதி அளவு விலக்கிக் கொண்டு லாபம் பார்ப்பது பலன் அளிக்கும் என்கின்றனர்.
நேரடி பங்கு முதலீட்டாளர்களை பொருத்தவரை சொந்த ஆய்வின் அடிப்படையில் முடிவுகளை எடுத்திருக்கவில்லை எனில், உடனடியாக வெளியேறுவது நல்லது என்கின்றனர். இவர்கள் தேர்வு செய்த பங்குகளின் செயல்பாடு வலுவான அடிப்படையில் அமைந்திராமல் அதிர்ஷ்டம் காரணமாக இருக்கலாம் என்பதால், இப்போதே லாபம் பார்த்து விடலாம்.
பங்குகள் நிலை
சந்தையில் திருத்தம் ஏற்படாவிட்டாலும் கூட, அதிக விலையை தொட்டிருக்கும் ஒரு சில பங்குகள் திருத்தத்திற்கு உள்ளாகலாம் என்கின்றனர்.
உயர்வுக்கான அடிப்படை இல்லாத பங்குகளில் இருந்து வெளியேறுவது சரியான உத்தியாக இருக்கும். பாதுகாப்பை நாடுபவர்கள் ‘புளுசிப்’ பங்குகளை நாடலாம். இந்த வகை பங்குகளின் விலை அதிகமாக இருந்தாலும், இவை அதிக பலனை அளிக்காமல் போகலாம் என்றாலும் பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர்.
மேலும், பங்கு முதலீடு தொகுப்பை மாற்றி அமைக்கவும் இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களை பொருத்தவரை, முந்தைய ஒதுக்கீட்டிற்கு ஏற்ப அமையும் வகையில் பகுதி அளவு விலக்கிக் கொண்டு, அந்த தொகையை தங்கம் மற்றும் கடன்சார் நிதிகளில் முதலீடு செய்யலாம் என்கின்றனர்.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அளவையும் கவனிக்க வேண்டும். நிதி இலக்குகள் நெருங்கும் நிலையில் இருப்பவர்கள், முதலீட்டை விலக்கி, வைப்பு நிதி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். செயல்படாத நிதிகளை விலக்கி, தரமான நிதிகளை நாடுவது பொருத்தமாக இருக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|