பதிவு செய்த நாள்
20 நவ2021
19:44
புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை, ‘சவுதி அராம்கோ’ வாங்குவதாக இருந்தது மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய ரசாயன வணிகத்தில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ‘சவுதி அராம்கோ’, 20 சதவீத பங்குகளை, 1.11 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக இருந்த ஒப்பந்தம், மறுமதிப்பீடு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்குகள் வாங்கும் முயற்சி ஏற்கனவே இருமுறை தள்ளிப்போனது. இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பங்கு விற்பனை குறித்து, முதன்முதலில் 2019ம் ஆண்டு ஆகஸ்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பங்குகள் கைமாறுவது தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.
இதற்கிடையே, ரிலையன்ஸ் நிறுவனம், புதிய எரிசக்தி வணிகத்தில் இறங்க உள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 74 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்தது.
அண்மைக் காலத்தில், ரிலையன்ஸ் வணிகத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை அடுத்து, 2019ல் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் ரிலையன்ஸ் பங்கு களின் மதிப்பையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த மறுமதிப்பீட்டுக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எண்ணெய் முதல் ரசாயனம் வரையிலான வணிகத்தை தனியே பிரிப்பது குறித்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம், திரும்ப பெறப்படுவதாகவும் ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|