பதிவு செய்த நாள்
21 நவ2021
19:24
சொந்த வீடு போலவே, சொந்தமாக கார் வாங்கவும் கடன் வசதியை பலரும் நாடுகின்றனர். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன் வசதியை அளிக்கின்றன. வாகன கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, காருக்கான பட்ஜெட், வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிப்பது போலவே, கடன் தொகையை செலுத்த குறுகிய தவணை காலத்தை நாடுகிறோமா அல்லது நீண்ட தவணை காலத்தை நாடுகிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இதன் முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.
தவணை குறைவு:
பொதுவாக கார் கடனை அடைக்க வங்கிகள் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை நீண்ட கால வசதியை அளிக்கின்றன. நீண்ட காலத்தை தேர்வு செய்யும் போது, மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை குறைவாக இருக்கும் என்பது சாதகமான அம்சமாகும்.
சுமை அதிகம்:
அதே நேரத்தில் ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை குறைந்த கால வசதியை நாடினால், மாதத்தவணை அதிகம் செலுத்த வேண்டும். ஆனால், கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதோடு, குறைந்த கால அவகாசத்தில் கடனை அடைத்து விடலாம் என்பதும் சாதகம்.
ஒப்பீடு தேவை:
குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன் வாய்ப்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கு, 8.5 சதவீதத்தில் கடன் பெற்றால், நான்கு ஆண்டு காலத்தில் 1.83 லட்சம் அளவில் வட்டி செலுத்த வேண்டும் எனில், எட்டு ஆண்டு காலத்திற்கு 3.81 லட்சம் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இது இரு மடங்காகும்.
அதிக வட்டி:
பொதுவாக கடனை அடைக்க கூடுதல் காலம் தேவைப்படுபவர்கள் நீண்ட காலத்தை நாடலாம். இதனால் மாதாந்திர சுமை குறைவாக இருந்தாலும், மொத்த சுமை அதிகம். மேலும், நீண்ட கால கடனுக்கு வங்கியின் கடன் விகிதமும் சற்று கூடுதலாகவே இருக்கும்.
திட்டமிடல் தேவை:
பொதுவாக ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் என்பது கார்களின் சராசரி பயன்பாட்டு காலமாக அமைகிறது. அதன் பின் காரை மாற்ற விரும்பினால், கடன் தவணை ஒரு சிக்கலாக அமையும். எனவே, கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்த அம்சங்களை மனதில் கொண்டு அதற்கேற்ப திட்டமிடுவது பலன் அளிக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|