பதிவு செய்த நாள்
28 நவ2021
19:10
சந்தையில் ஏற்ற இறக்கமான போக்கு நிலவும் சூழலில், புதிய முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி ஒரு பார்வை.பங்குச் சந்தையின் தற்போதைய ஏற்ற இறக்கமான போக்கு, முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்திஉள்ளது.
குறிப்பாக, ‘மியூச்சுவல் பண்ட்’ துறையில் நுழைந்த புதிய முதலீட்டாளர்கள், சந்தையின்போக்கால் கலக்கம் அடைந்துள்ளனர்.சந்தையின் ஏறுமுகமான போக்கால் ஈர்க்கப்பட்டவர்கள், அதன் தற்போதைய ஏற்ற இறக்கத்தால் குழப்பம் அடைந்துள்ளனர்.கடந்த அக்டோபர் மாதம் உச்சம் தொட்ட தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, அதன் பின் 6 சதவீதம் சரிந்துள்ளது. சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதால், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நீண்ட கால நோக்கம்
பங்குகளின் அதிக மதிப்பீடு, அதிக பணவீக்கம், வட்டி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பு, ‘கோவிட் -19’ பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள், கடந்த வாரம் சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தன. மேலும், சர்வதேச அளவில் பணவீக்கத்தின் பாதிப்பு, பத்திரங்கள் பலன் உயர்வு உள்ளிட்ட அம்சங்கள், பங்குச் சந்தை மீது தாக்கம் செலுத்தலாம் என்கின்றனர். எனவே, சந்தையின் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்றே கருதப்படுகிறது.
இந்த பின்னணியில் சமபங்கு முதலீடு என்பது நீண்ட கால நோக்கிலானது என்பதை புதிய முதலீட்டாளர்கள் நினைவில் கொள்வது அவசியம்.பங்கு முதலீடு நீண்ட கால நோக்கிலானது என்பதை மனதில் கொள்ளும் போது, சந்தையின் இறக்கத்தை வாய்ப்பாக பயன்படுத்தி, சமபங்கு நிதிகளில் முதலீட்டை அதிகமாக்கி கொள்ளலாம் என்கின்றனர்.
தரமான பங்குகளை கொண்டுள்ள நிதிகளை தேர்வு செய்து, புதிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். சந்தை சரிவுக்கு உள்ளானால், அந்த திருத்தத்தை பயன்படுத்தி, நீண்ட கால நோக்கிலான முதலீட்டை புதிய முதலீட்டாளர்கள் மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர்.
எஸ்.ஐ.பி., முதலீடு
மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வழி செய்யும் எஸ்.ஐ.பி., முறையின் மூலமும் புதிய முதலீட்டாளர்கள் சந்தையில் நுழையலாம் என்கின்றனர். மாறாக, மொத்தமாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கள் இடர்தன்மைக்கு ஏற்ற நிதிகளை தேர்வு செய்யலாம். ‘பாலன்ஸ்டு அட்வாண்டேஜ்’ நிதிகள் இதற்கு பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.
‘ஸ்மால்கேப்’ நிதிகளில் முதலீடு செய்துள்ளவர்கள், அவற்றில் இருந்து பகுதியளவு வெளியேறுவது ஏற்றதாக இருக்கும் என்றும் சொல்கின்றனர். இந்த வகை நிதிகள் நீண்ட காலமாக நல்ல பலனை அளித்து வருவதால் மாறுதலுக்கு உள்ளாகலாம். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது எப்போதுமே இருப்பது தான். எனவே, புதிய முதலீட்டாளர்கள் இதை புரிந்து, தங்கள் நிதி இலக்குகளை மனதில் கொண்டு, நீண்ட கால அடிப்படையிலான அணுகு முறையை பின்பற்ற வேண்டும்.
ஏற்ற இறக்கத்தை ஏற்று, சூழல் மற்றும் இடர் அம்சங்களுக்கு ஏற்ப சீராக முதலீடு செய்து வர வேண்டும். இடர்களை எதிர்கொள்ள, முதலீடு தொகுப்பு சரிவான விகிதத்தில் அமைந்து இருப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஏற்ற நிதிகளை நாட வேண்டும். சந்தையின் ஏற்ற இறக்கத்தால் பீதி அடைந்து அவசர முடிவுகளை மேற்கொள்வதை தவிர்த்து, நிதானமாக செயல்பட்டால் சரியும் சந்தையிலும் நல்ல வாய்ப்புகளை கண்டறிய முடியும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|