பதிவு செய்த நாள்
08 டிச2021
20:37
மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், அதில் மாற்றமில்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, நிதிச் சந்தை நிலவரம் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கிறது.இதன்படி கடந்த, 6ம் தேதி இக்குழுவின் கூட்டம் துவங்கியது.
இரு நாட்கள் நடந்த இக் கூட்டத்தில் எடுத்துள்ள கொள்கை முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம், மாற்றமின்றி, 4 சதவீதமாக தொடர, குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் செய்யும் டிபாசிட்டிற்கான ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் மாற்றமின்றி, 3.35 சதவீதமாக தொடருகிறது.
நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்க இலக்கை பராமரிக்கும் நோக்கில் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதமாக வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல, பணவீக்கம், 5.3 சதவீதம் என்ற அளவில், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்குள் இருக்கும்.
எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வால், செப்.,ல் 4.35 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம், 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும், 2026 மார்ச் வரை சில்லரை பணவீக்க இலக்கு, 2 சதவீதத்திற்கு குறையாமலும், 6 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பணவீக்க உயர்வால் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்புதிய ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடர ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து, 9வது முறையாக ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் இருப்பது நிதிச் சந்தை வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|