பதிவு செய்த நாள்
10 டிச2021
01:07
மும்பை:நடப்பு ஆண்டில், தொற்று நோய் பாதிப்புகள் இருந்த போதிலும், ‘டாப்’ நிறுவனங்களின் நிகர மதிப்பு, 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ‘பர்கண்டி’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
அதேசமயம் தொற்று நோய் பரவல், சிறு வணிகங்கள் மற்றும் இயல்பு வாழ்க்கை ஆகியவற்றில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், ‘பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500’ எனும் டாப் நிறுவனங்களின் பட்டியலை தொகுத்துள்ளது.இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் மொத்த நிகர மதிப்பு 228 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த 500 நிறுவனங்களில், 200 நிறுவனங்களின் நிகர மதிப்பு, இவ்வாண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
பட்டியலில் முதலிடத்தில், முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 16.7 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில், 13.1 லட்சம் கோடி ரூபாயுடன் ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனமும், மூன்றாவது இடத்தில் 9.1 லட்சம் கோடி ரூபாயுடன் ‘எச்.டி.எப்.சி., வங்கி’யும் இடம்பெற்றுள்ளன.
சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன், முதலிடத்தில் உள்ளது.இந்த ஆண்டில், இதன் மதிப்பு 127 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த 500 நிறுவனங்கள், மொத்தம் 43 நகரங்களில் உள்ளவையாகும்.
இவற்றில், மும்பையில் 167 நிறுவனங்களும்; பெங்களூரில் 52 நிறுவனங்களும்; சென்னையில் 38 நிறுவனங்களும் உள்ளன. மொத்த நிறுவனங்களில் 77 நிறுவனங்கள், நிதி சேவை துறையையும், 64 நிறுவனங்கள் சுகாதாரப் பிரிவையும் சேர்ந்தவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிறுவனங்கள்
தமிழகத்தின் முதல் 10 நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 116 சதவீதம் அதிகரித்து, 5.9 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, ‘ஹுருன் இந்தியா 500’ பட்டியலின் மொத்த மதிப்பில், 2.6 சதவீதத்துக்கு சமம்.
தமிழகத்தின் மிகப்பெரிய நிறுவனமாக, 2.18 லட்சம் கோடி மதிப்புடன், ‘டைட்டன்’ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.இதையடுத்து, இரண்டாவது இடத்தில், 67 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்புடன் ‘ராம்சரண் அன்ட் கோவிந்த்’ நிறுவனமும், மூன்றாவது இடத்தில் 59 ஆயிரத்து, 498 கோடி ரூபாய் மதிப்புடன் ‘அப்போலோ மருத்துவமனை’ நிறுவனமும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|