பதிவு செய்த நாள்
12 டிச2021
21:32
பங்குச் சந்தை முதலீடு இடர்களுக்கு உட்பட்டது என்பது தெரிந்த விஷயம் தான். சந்தையின் ஏற்ற இறக்கம் முதலீட்டின் பலன் மீது தாக்கம் செலுத்தும் என்பதும் தெரிந்த விஷயம் தான். நீண்ட கால நோக்கிலான முதலீடே, சந்தையின் ஏற்ற இறக்கத்தை மீறி பலன் பெறுவதற்கான வழியாக வலியுறுத்தப்படுகிறது.
ஏற்ற இறக்கம் சந்தையில் இயல்பு தான் என்றாலும், திடீரென சந்தை சரியும் போது முதலீட்டாளர்கள் அச்சமும், கவலையும் கொள்வது இயல்பானதே. பதற்றம் சந்தையில் இருந்து வெளியேற வைக்கலாம். சந்தை சரிவால் ஏற்படக்கூடிய நிலையை எதிர்கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
எவ்வளவு தொகை:
பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீடு தேவை என வலியுறுத்தப்படுவதால், ஒருவர் உடனடியாக தேவைப்படக்கூடிய தொகையை சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து, சந்தை சரிவுக்கு பின் மீட்சி ஏற்படும் வரை காத்திருந்து பலன் பெறலாம். இத்தகைய தொகையை முதலீடு செய்யலாம்.
நிதி திட்டமிடல்:
நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யக்கூடிய தொகையை அறிய நிதி திட்டமிடல் கைகொடுக்கும். நிதி இலக்குகளின் அடிப்படையில் இந்த தொகையை தீர்மானிக்கலாம். இது இடர்களை குறைக்க உதவும். மேலும் பரவலாக்க உத்தி மூலமும் இடர்களை எதிர்கொள்ளலாம்.
எளிய வழி:
சிறு முதலீட்டாளர்களை பொறுத்தவரை சீரான முதலீட்டிற்கான வாய்ப்பாக அமையும் எஸ்.ஐ.பி., முறையில் சம பங்கு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம். படிப்படியாகவும் முதலீட்டை மேற்கொள்ளலாம். சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்படாமல் முதலீட்டை தொடர்வது ஏற்றது.
யாருக்கு கவலை? :
எனினும், நிதி இலக்குகளுக்கு நெருக்கமாக வந்திருப்பவர்கள் சந்தை சரிவின் போது கவலை கொள்வது பொருத்தமானதே. இவர்கள் சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது, மேலும் உயர்வுக்கு காத்திருக்காமல் முதலீட்டை விலக்கிக் கொள்வது நல்லது. ஓய்வு காலம், குழந்தைகள் உயர் கல்வி இலக்கு இதற்கான உதாரணம்.
எதிர்பார்த்த பலன்:
இதே போல, நீண்ட கால இலக்குகளுக்கு முதலீடு செய்தவர்கள், அதற்கு தேவையான தொகை முதலீட்டில் சேர்ந்திருந்தாலும், மேலும் உயர்வுக்கு காத்திருக்காமல் முதலீட்டை விலக்கிக் கொள்ளலாம். சரிவு தொடர்பான அச்சம் இருந்தால், பாதுகாப்பிற்காக ஒரு பகுதியை விலக்கிக் கொள்ளலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|