பதிவு செய்த நாள்
19 டிச2021
21:51
நிதி இலக்குகளை அடைய திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்யும் போது சரியான நிதி சாதனங்களை தேர்வு செய்வதும் முக்கியமானது. வைப்பு நிதி, பங்குகள், பத்திரங்கள், பண்டகங்கள் என பல வகையான முதலீடு வாய்ப்புகள் உள்ள சூழலில், இவற்றில் பொருத்தமானவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கு நிதி ஆலோசகர்கள் உதவியை நாடுவதும் ஏற்றது. சொந்தமாக முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்தாலும், ஆலோசகர்கள் உதவியை நாடினாலும், முதலீட்டை தீர்மானிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
பலன் என்ன?
முதலீட்டிற்கான வாய்ப்பை தேர்வு செய்யும் முன் முதலில் கவனிக்க வேண்டிய அம்சம் அது தரக்கூடிய பலனாகும். நிச்சயிக்கப்பட்ட பலனை அளிக்கக் கூடியதா அல்லது சந்தையுடன் தொடர்பு கொண்டதா ஆகிய அம்சங்களை பரிசீலிப்பதோடு, கடன் சார்ந்த முதலீடா, பங்கு முதலீடா என்றும் கவனிக்க வேண்டும்.
பணவீக்கம்:
முதலீடு அளிக்கும் பலனோடு, பணவீக்கத்தின் தாக்கத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் பின், முதலீட்டிற்கான செலவை மனதில் கொள்ள வேண்டும். முதலீடு செய்வதற்கான கட்டணம், பராமரிப்பு கட்டணம், விலக்கிக் கொள்வதற்கான கட்டணம் உள்ளிட்ட செலவுகளை கணக்கில் கொள்ள வேண்டும்.
நிதி இலக்கு:
முதலீட்டிற்கான கால அளவையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். குறுகிய கால இலக்குகளுக்கு ஏற்ற முதலீடு வாய்ப்புகள் உள்ளன. வளர்ச்சி நோக்கிலான முதலீடு வாய்ப்புகள் நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்றவை. கூட்டு வட்டியின் பலனை நீண்ட கால முதலீட்டில் பெறலாம்.
வருமான வரி:
முதலீட்டில் வருமான வரி அம்சத்தையும் மறந்துவிடக்கூடாது. ஒரு சில முதலீடுகள் வருமான வரி சலுகை அளிப்பவை. ஒரு சில முதலீடுகள் அனைத்து கட்டத்திலும் வரி சலுகை கொண்டிருக்கலாம். சில முதலீடுகளில் மூலதன ஆதாய வரி விதிப்பு பொருந்தும். இவை முதலீடு அளிக்கும் பலனில் தாக்கம் செலுத்தும்.
பணமாக்கல்:
முதலீட்டின் பலனை போலவே, அதன் பணமாக்கும் தன்மையும் முக்கியமானது. அதாவது தேவைப்படும் போது தொகையை விலக்கிக் கொள்வது எந்த அளவு எளிதானது என கவனிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் போன்ற முதலீட்டில் பணமுடையின் போது தொகையை விலக்கிக் கொள்வது கடினம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|