பதிவு செய்த நாள்
19 டிச2021
22:24
அப்பாவின் வயது 90. பென்சன் மாதம் 3 ஆயிரம் ரூபாய். வங்கியில் உள்ள வைப்பு நிதியான 5 லட்சம் ரூபாய்க்கு வரும் வட்டிக்கு, 20 சதவீதம் வரிப் பிடித்தம் செய்யப்படும் என்று சொல்கிறார்கள். வரிப் பிடித்தம் செய்யாமலிருக்க '15ஜி' படிவம் கொடுத்தால், ' பான்' எண் அவசியம் என்கிறார்கள். இதுவரை பான் வாங்கவில்லை. என்ன செய்வது?
ஸ்ரீனிவாசன், மதுரை.
இன்று பான் எண் பெறுவது என்பது மிகச் சுலபமான வேலை. இந்த எண்ணைப் பெற்று விட்டால், மூத்த குடிமக்களுக்கு உள்ள சலுகையாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியில் வரி விலக்கு கோரலாம்.மேலும், உங்கள் தந்தைக்கு 90 வயது ஆகிவிட்டதாலும், அவருடைய வருவாய் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இருக்காது என்பதாலும், எந்த வரியும் செலுத்த வேண்டியிராது. பான் எண் வாங்கிவிட்டால், தாராளமாக படிவம் 15ஜியும் கொடுக்கலாம்.
துணை அஞ்சல் நிலையத்தில் வைக்கப்படும் சேமிப்பு கணக்கில் என் பெரியம்மா பணம் வைத்துள்ளார் . தற்சமயம் இறந்து விட்டார். அவருடைய கணக்கில் நாமின் போடப்படவில்லை, இதனால் கணக்கை பைசல் செய்ய ஆறு மாதம் ஆகும் என தெரிவிக்கின்றனர். இதற்கான தீர்வு என்ன?
தி. சுதர்சன், மதுரை.
அந்த பெரியம்மாவுக்கு நீங்கள் தான் வாரிசு என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்குமே.அவற்றை தயார் செய்து நீங்கள் சமர்ப்பிப்பதற்கும், அஞ்சல் துறை சரிபார்ப்பதற்கும் இந்தக் கால அவகாசம் தேவைப்படலாம். பெரியம்மாவின் சொத்துக்கு வேறு யாரேனும் வாரிசுகள் இருந்து, அவர்களும் இந்த பணத்தைக் கோரி வந்தால் என்ன ஆவது என்ற தயக்கமும் அஞ்சல் துறைக்கு இருக்கும்.
அதனால் தான், நான் மீண்டும் மீண்டும் இந்தப் பகுதியில், நாமினி போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன்.அரசாங்கத் தரப்பில், உரிய நபருக்குத் தான் பணம் போய்ச் சேருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள். தவறு உங்கள் பக்கத்தில். அஞ்சலக நடைமுறை மீது குறை காண்பானேன்?
நான் ஓர் இல்லத்தரசி. வங்கியில் இருந்து வட்டியாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. வேறு வருமானம் இல்லை. நான் வருமான வரி கட்ட வேண்டுமா?
மேனகா, திருவள்ளூர்.
உங்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு உண்டு. வேறு வருமானம் இல்லை என்பதால், இந்த 50 ஆயிரம் ரூபாய் தான் உங்கள் ஆண்டு வருமானம். இதற்கு வரி செலுத்த வேண்டாம்.ஆனால், அதற்கு நீங்கள் பான் எண் வைத்திருக்க வேண்டும். இந்த 50 ஆயிரத்தை வருமான வரி படிவத்தில் காண்பித்துவிட்டு, அது, உங்களுடைய வரி விலக்கு அளவுக்குள் தான் அடங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக 'நில் ரிட்டர்ன்' தாக்கல் செய்யுங்கள், போதும்.
வருமான வரி அலுவலகத்தில் இருந்து தாக்கல் செய்ய குறுந்தகவல் வருகின்றது. வரி கணக்கருக்கு கொடுக்குமளவு என் நிதி வருவாய் இல்லை. வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிடில் ஏதேனும் பாதகம் ஏற்படுமா?
பங்கஜவல்லி, திருப்பூர்.
வரி கணக்கரிடம் போகத் தேவை இல்லை. நீங்களே, வருமான வரி தளத்தில் பதிவு செய்து கொண்டு, மூன்று, நான்கு முறை உள்ளே போய் வாருங்கள்.முதலில் கொஞ்சம் தலை சுற்றும். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஏராளமான வீடியோக்கள் வளைய வருகின்றன. அவற்றைப் பார்த்துக் கற்றுக்கொண்டு, நீங்களே ரிட்டர்ன் தாக்கல் செய்யுங்கள்.
அரசாங்கத்தின் 'இந்திய வணிகர்களின் வெல்பேர் போர்டு' எப்போதும் துவங்கும்?
ஞானசேகர், அமைந்தகரை.
இந்திய வணிகர்களின் நலனைப் பாதுகாக்கத் தான் பொதுத் துறை வங்கிகள் உள்ளனவே. விதவிதமான திட்டங்கள், குறைந்த வட்டி, வட்டி மானியம்... என்று வணிகர்களுடைய பாதுகாவலனாக அல்லவா இந்திய அரசு திகழ்கிறது. சிறப்பு நிதி உதவித் திட்டங்களும் அணிவகுக்கின்றனவே. எல்லாவற்றுக்கும் மேல், வாங்கிய கடனை ஒழுங்காக செலுத்த வில்லை என்றால், பெரிய அபராதமோ, நடவடிக்கையோ இல்லை. கொஞ்சம் காலம் வாராக்கடனாக காண்பிக்கப்பட்டு, பின்னர், தள்ளுபடி செய்யப்படும் அனுசரணை வேறு எந்த நாட்டில் கிடைக்கும்? இதற்கு நடுவே எதற்கு தனியே ஒரு நல வாரியம்?
ஆண்டுக்கு 1௦ லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் ஓர் அரசு ஊழியர் நான்... ஒன்றரை லட்சம் ரூபாய் சேமிப்பு காட்டியும், ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டிஉள்ளது. வரி செலுத்துவது குறைய ஆலோசனை ஏதும் உண்டா?
க.மு.சுந்தரம், தேனி.
புதிய வருமான வரி முறைப்படி, ரிட்டர்ன் தாக்கல் செய்து பாருங்களேன். எந்த விதமான கழிவுகளையும் கோராமல், மொத்த வருவாயில் நேரடியாக 15 சதவீதம் வருமான வரி கட்டிவிடுவது லாபகரமாக இருக்கிறதா என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். 'இவ்வளவு பணம் கையைவிட்டுப் போகிறதே' என்று பொறாமை வேண்டாம்.
இந்த நாடும், இதன் வளங்களும், வாய்ப்புகளுமே ஓர் அரசு ஊழியரை 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வைத்திருக்கிறது. அவர் இந்நாட்டுக்குச் செய்யும் கைமாறாகவே, வருமான வரியைக் கருத வேண்டும்.
இந்தியாவெங்கும் ரேஷனில் இலவச அரிசி, ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு உருளை என்பன போன்ற பல திட்டங்கள், நீங்கள் கட்டும் வரியின் நற்பலன்கள். கண்ணுக்குத் தெரியாமல் நடைபெறும் நல்லவற்றுக்கு நீங்கள் கட்டும் வரி, அணில் சுமை.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|