பதிவு செய்த நாள்
20 டிச2021
16:22
மும்பை : ஒமைக்ரான் அச்சுறுத்தல் மீண்டும் உலகளவில் வேகமாக பரவி வருவதால் அதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(டிச., 20) கடும் சரிவை சந்தித்தன. இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டு வந்த இந்திய உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகள் இப்போது உருமாறிய ஒமைக்காரன் வைரஸ் பரவலால் மீண்டும் அச்சத்தை சந்தித்துள்ளன. டெல்டா வைரஸை விட இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதால் மீண்டும் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் மீண்டும் தொழில்துறையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது. இதன் தாக்கமாக இன்றைய வர்த்தகவாரத்தின் முதல்நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1028.61 புள்ளிகள் சரிந்து 55,983.13ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 307.50 புள்ளிகள் சரிந்து 16,677.70ஆகவும் துவங்கின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, ஒமைக்காரன் அச்சுறுத்தல், கடன் வட்டி விகிதங்களை சீனா குறைத்தது, முன்னணி நிறுவனங்கள் சரிவு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க அதிக சரிவிலேயே வர்த்தகமாகின. குறிப்பாக மதியம் 2 மணியளவில் 1849 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது. கடந்த ஏப்ரலுக்கு பின் இன்றைய வர்த்தகத்தில் தான் இந்த அளவு சரிவு ஏற்பட்டது. பின் வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 1,189.73 புள்ளிகள் சரிந்து 55,822.01ஆகவும், நிப்டி 371 புள்ளிகள் சரிந்து 16,614.20ஆகவும் நிறைவடைந்தன.
ரூ.9 லட்சம் கோடி ‛அவுட்'
வாரத்தின் முதல்நாளிலேயே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்ததன் காரணமாக இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். இதன்மூலம் மும்பை பங்குச்சந்தையின் மூலதன மதிப்பு ரூ259.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.250லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|