பதிவு செய்த நாள்
26 டிச2021
19:06
இந்த ஆண்டு நிதித் துறையில் ஆதிக்கம் செலுத்திய போக்குகள் நிதி பாடங்களை அளிப்பதோடு, புதிய வாய்ப்புகளையும் அடையாளம் காட்டியுள்ளன.
எல்லா ஆண்டுகளையும் போலவே, 2021ம் ஆண்டும் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் புதிய போக்குகளும், மாற்றங்களும் நிகழ்ந்த நிலையில், தனிநபர் துறையும் இதற்கு விதிவிலக்காக அமைய வில்லை.
‘கோவிட்- – 19’ இரண்டாம் அலை பாதிப்புக்கு மத்தியில், இந்த ஆண்டு நிதித் துறையில் பல முக்கிய போக்குகளையும், மாற்றங்களையும் கொண்டிருந்தது. பங்குச் சந்தையின் எழுச்சியில் துவங்கி கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான பரபரப்பு வரை இந்த ஆண்டின் முக்கிய போக்குகள் குறித்தும், அவை அளிக்கும் நிதி பாடங்கள் குறித்தும் பார்க்கலாம்.
குடும்ப பாதுகாப்பு
கோவிட் –- 19 பாதிப்பு காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில், இரண்டாம் ஆண்டு அலை பாதிப்பு, குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்கு மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை அழுத்தம் திருத்தமாக மீண்டும் உணர்த்தியது. பாதிக்கப் பட்ட பல குடும்பங்கள் மருத்துவ செலவுக்காக நீண்ட கால சேமிப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்ததால், மருத்துவ காப்பீட்டின் தேவை நன்கு உணரப்பட்டது.
இதற்கு முன்னர் பெரும்பாலும் வருமான வரி சேமிப்பிற்காக நாடப்பட்ட மருத்துவ காப்பீடு இப்போது நிதி திட்டமிடலில் முக்கிய அங்கம் வகிக்கிறது.மருத்துவ காப்பீடு போலவே, அவசர கால நிதியின் அவசியமும் பரவலாக உணரப்பட்டது. பொருளாதாரம் மீட்சி அடைய துவங்கியிருந்தாலும், பொருளாதார சிக்கல்கள் தொடர்ந்த நிலையில், அவசரகால நிதி கையில் இருப்பதன் அவசியத்தை பெரும்பாலானோர் உணர்ந்துள்ளனர்.
அவசர கால நிதியை இன்னமும் உருவாக்கி கொள்ளாதவர்கள், முதலில் இத்தகைய நிதியை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே உருவாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப இதை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தலாம் என்கின்றனர்.
சந்தை முதலீடு
பங்குச் சந்தையை பொறுத்தவரை ஏற்ற இறக்கமான சூழல் நிலவி வருகிறது. இரண்டாம் அலை பாதிப்புக்கு பின், சற்றும் எதிர்பாராத வகையில் சந்தை ஏற்றம் கண்டது. பொது பங்கு வெளியீடுகளும் கவனத்தை ஈர்த்தன.இந்நிலையில், முதலீட்டை தொடர்ந்தவர்கள் நல்ல பலன் பெற்றனர்.
தொடர்ந்து ஏறுமுகம் கண்ட சந்தையில் திருத்தம் நிகழலாம் என பேசப்படும் சூழலில், நீண்ட கால அடிப்படையில் முதலீட்டை தொடர்வதும், இடர்களை குறைக்க பரவலாக்கத்தை நாடுவதும் ஏற்றதாக இருக்கும் என்பதை முதலீட்டாளர்களுக்கு உணர்த்திஉள்ளது.
திருத்தம் நிகழும் போது அச்சப்பட்டு வெளியேறுவதை விட, நல்ல பங்குகளை வாங்கும் வாய்ப்பாக கருதலாம் என்று சொல்கின்றனர். இதற்கேற்ப புதிய டிமெட் கணக்குகள் துவக்கப்படுவது அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு ஊதியம் குறைப்பு, பணியிழப்பு போன்றவை ஆதிக்கம் செலுத்திய சூழலில், இந்த ஆண்டு பொருளாதாரம் ஓரளவு மீண்டு, சேமிப்பிற்கு மிஞ்சும் வாய்ப்புஏற்பட்டுள்ளது.
பொது முடக்கம், வீட்டில் இருந்து பணியாற்றும் வசதி ஆகியவற்றால் சாத்தியமாகியுள்ள சேமிப்பை சரியான வழியில் முதலீடு செய்வது அவசியம்.கிரிப்டோ நாணயங்கள் முதலீடு பரபரப்பாக பேசப்பட்டாலும், இவற்றின் அடிப்படை பற்றி தெரியாதவர்கள் விலகி நிற்பதே சரியாக இருக்கும் என்கின்றனர்.
பி.என்.பி.எல்., மற்றும் ‘டிஜிட்டல்’ கடன் வசதிகள் அதிகரித்தாலும், இவற்றையும் கவனமாக பயன்படுத்துவதே சரியாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|