பதிவு செய்த நாள்
02 ஜன2022
22:13
கொரோனா சூழலுக்கு மத்தியில், நிதிச் சேவைகள் டிஜிட்டல்மயமாவது அதிகரித்திருப்பதோடு, பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பும் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையை பொருத்தவரை கடந்த 2021ம் ஆண்டு ஏற்றம் மிகுந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏற்ற இறக்கமான போக்கை மீறி பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டதோடு, நிகர அடிப்படையில் ஏறுமுகம் கண்டது. இந்த போக்கின் இன்னொரு முக்கிய அம்சமாக, சந்தையில் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பும் அதிகரித்துள்ளது.சர்வதேச அளவிலும், கொரோனா சூழலுக்கு மத்தியில் பல்வேறு முதலீட்டு பிரிவுகளில் பண வரவு அதிகரித்திருந்தாலும், இந்தியாவில் சில்லரை முதலீட்டாளர்களின் ஆர்வம் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
உபரி வருவாய்
இந்தியாவில் பங்கு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 2020 –- 21 காலத்தில் 142 லட்சம் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கேற்ப பங்கு முதலீட்டிற்கான ‘டிமெட்’ கணக்குகளும் அதிகரித்துள்ளன. சிறிய நகரங்களில் உள்ளவர்களும் பங்கு முதலீட்டில் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.அதே போல, சந்தையில் நுழையும் நிறுவனங்களின் பொது பங்கு வெளியீடுகளுக்கும் நல்ல வரவேற்பு நிலவுகிறது.
பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்களின் ஆர்வத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கொரோனா பெருந்தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திஇருந்தாலும், சேமிப்பு மற்றும்முதலீட்டு நோக்கில் நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழல் உண்டானது. இதன் காரணமாக செலவுகள் குறைந்ததோடு, அலுவலகம் சென்று வரும் நேரமும் மிச்சமானது. இதனால் சேமிப்பு அதிகரித்தது. உபரி வருவாய் அதிகரித்த நிலையில், கைவசம் நேரமும் இருந்ததால், ஆர்வம் உள்ளவர்கள் பங்குமுதலீட்டில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ‘டிஜிட்டல்’ சேவைகளை பயன்படுத்தும் போக்கும் அதிகரித்தது. பணப் பரிவர்த்தனை, பொருட்களை ‘ஆர்டர்’ செய்வது என பலவற்றில் டிஜிட்டல் சேவையை மக்கள் அதிகம் நாடினர்.
நிதிச் சேவைகள்
இந்த சூழலில் நிதிச் சேவை நிறுவனங்களும், டிஜிட்டல் முறையிலான சேவைக்கு முக்கியத்துவம் அளித்தன. காப்பீடு நிறுவனங்களும் டிஜிட்டல் வசதியில் கவனம் செலுத்தின. டிஜிட்டல் சேவைகளுக்கு பழகிய மக்கள், முதலீட்டிற்கும் டிஜிட்டல் வழியை நாடத் துவங்கினர்.
டிமெட் கணக்கு துவங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் பலருக்கும் ஆர்வம் உண்டானது.‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பல பங்கு முதலீட்டை எளிதாக்கும் செயலிகளை அறிமுகம் செய்ததும் இதற்கு ஊக்கமாக அமைந்தது.
வீட்டில் இருந்தபடியே ‘ஸ்மார்ட் போன்’ வாயிலாக முதலீடு செய்யும் வசதியை பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இரண்டாம் அலை அச்சுறுத்தலை மீறி பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதும் இதற்கு வலு சேர்த்தது.‘ரியல் எஸ்டேட்’ முதலீடு தேக்கம் அடைந்ததும், வைப்பு நிதி முதலீடு அளிக்கும் பலன் குறைந்ததும், இளம் முதலீட்டாளர்களை பங்கு முதலீட்டில் ஆர்வம் கொள்ள வைத்தது.
‘மியூச்சுவல் பண்ட்’ முதலீட்டிலும் ஆர்வம் காட்டுகின்றனர். ‘ஆன்லைன்’ பரிவர்த்தனை, கே.ஒய்.சி., நடைமுறை போன்றவை எளிதாக்கப்பட்டதும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.இத்தகைய காரணங்களால், பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்களின் ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த போக்கு நீடிக்குமா எனும் கேள்வியை வல்லுனர்கள் விவாதித்து வந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய சூழலில், நுகர்வும் செலவும் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் சூழலில், முதலீட்டாளர்களின் ஊக்கமும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|