பதிவு செய்த நாள்
13 ஜன2022
20:55
புதுடில்லி:இந்தியாவில் தன் நிறுவன தயாரிப்புகளை அறிமுகம் செய்ய, அரசுடன் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
டெஸ்லா நிறுவனம் அதன் தயாரிப்புகளை, இந்தியாவில் அறிமுகம் செய்ய என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்ற டுவிட்டர் வாயிலான கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், அரசுடனான ஏராளமான சவால்களுடன் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில், மின்சார காருக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறு கோரிக்கை வைத்தார் எலான் மஸ்க்.
இதற்கு மத்திய கனரக துறை அமைச்சகம், ‘டெஸ்லா முதலில் இந்தியாவில் கார் தயாரிப்பை துவங்கட்டும். அதன் பின் வரி சலுகைகள் குறித்து பார்க்கலாம்’ என்று தெரிவித்தது.மேலும், எந்த வொரு வாகன நிறுவனத்திற்கும் இதுபோன்ற சலுகை களை வழங்கவில்லை என்றும், டெஸ்லாவுக்கு வரி சலுகைகளை வழங்குவது, இந்தியாவில் பல கோடி டாலர்களை முதலீடு செய்திருக்கும் மற்ற நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும், அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது, முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, 60 முதல் 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், டெஸ்லா நிறுவனம், அனைத்து வகையான மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை, ஒரே அளவாக 40 சதவீதமாக மாற்றும்படி கோரிக்கை வைத்தது. மேலும், இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்திய மின்சார வாகன சூழல் மேம்படும் என்றும்; நிறுவனம் விற்பனை, சேவை, சார்ஜிங் கட்டமைப்பு போன்ற வற்றில் குறிப்பிடத்தக்க அளவில், அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தது.
டெஸ்லா கடந்த ஆண்டு ஜனவரியில், ‘டெஸ்லா இந்தியா மோட்டார் அண்டு எனர்ஜி’ எனும் நிறுவனத்தை பெங்களூரில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், எலான் மஸ்க் அரசை குற்றஞ்சாட்டும் விதமாக இப்படி ஒரு பதிலளித்துள்ளார்.
அழுத்தம் கொடுக்க பார்க்கிறார்
எலான் மஸ்க், அரசு மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பி உள்ள நிலையில், அவர் சமூக ஊடகங்கள் வாயிலாக, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார் என்றும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அவரது இந்த தந்திரத்துக்கு இந்தியா அடிபணியாது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கான, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட சலுகை திட்டம் உள்ளது.இதன் கீழ், டெஸ்லா, உள்நாட்டில் உற்பத்தி செய்தால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|