பதிவு செய்த நாள்
16 ஜன2022
19:08
‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் கடன் வசதியிலும் அண்மை காலத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதும் எளிதாகி இருக்கிறது. கடன் வாங்குவதில் இருந்த தயக்கமும் குறைந்திருக்கிறது.
இந்த சூழலில் கடனை சரியாக கையாளத் தெரிந்திருப்பது அவசியம். இதற்கு கடன் சுழற்சி கருத்தாக்கத்தை புரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். கடனுக்காக விண்ணப்பிப்பது துவங்கி, முழு தொகையையும் வட்டியுடன் செலுத்தி வெளியேறுவது வரையிலான செயல்பாடுகள் கடன் சுழற்சி என கருதப்படுகிறது. இது தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கடன் கணக்கு:
கடன் சுழற்சி, கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய நிதி கணக்குகளில் இருந்து துவங்குகிறது. கடன் பெறுபவர், தனக்கு தேவையான கடன் வசதியையும், கடன் அளவையும் தீர்மானிக்க வேண்டும். அதன் பின், வரவு – செலவுகளுக்கு ஏற்ப மாதத் தவணையாக எவ்வளவு செலுத்த முடியும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
ஆய்வு தேவை:
கடன் வசதி தொடர்பான தகவல்களை ஆய்வு செய்வது அடுத்த கட்டமாக அமைகிறது. வட்டி விகிதம் உள்ளிட்ட கடனுக்கான அம்சங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ‘ஆன்லைன்’ சாதனங்களையும் நாடலாம். நிதி சூழலுக்கும், தேவைக்கும் பொருத்தமான கடன் வசதியை தேர்வு செய்ய இந்த ஆய்வு உதவும்.
விண்ணப்ப காலம்:
கடனுக்காக விண்ணப்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் தகவல்கள் சரியாக இடம் பெற்றிருப்பது, கடன் அனுமதியை எளிதாக்கும். அதே போல, கடன் தகுதிக்கு தேவையான ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும். ‘கிரெடிட்’ ஸ்கோரையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
கடன் வழங்கல்:
கடனுக்கான விண்ணப்ப செயல்முறை பூர்த்தியானவுடன் வங்கி அல்லது நிதி நிறுவனம் கடனுக்கான தொகையை பட்டுவாடா செய்யும். விதிகள், நிபந்தனைகளுக்கு ஏற்ப கடன் தொகை வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். கடன் பெற்ற பின், மாதத் தவணையை தவறாமல் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடன் பைசல்:
தவணையை முறையாக செலுத்தி வந்தால், உரிய காலத்தில் கடனை அடைத்து விட்டு வெளியேறலாம். கடன் முடிவடைந்ததற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். கடனுக்கான காலம் குறைவாக இருப்பதும், தேவைக்காக மட்டுமே கடன் வாங்குவதும் கடன் நிர்வாகத்தில் கைகொடுக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|