பதிவு செய்த நாள்
31 ஜன2022
01:36
இந்த ஆண்டு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயரும் வாய்ப்பிருப்பதால், அதற்கேற்ப திட்டமிடுவது அவசியமாகிறது.
‘கோவிட்’ பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ‘ரியல் எஸ்டேட்’ சந்தையும் வளர்ச்சி கண்டு வருகிறது. நாட்டின் முன்னணி ஏழு நகரங்களில், வீடுகள் விற்பனை ஆண்டு அடிப்படையில், 71 சதவீதம் அதிகரித்திருப்பதாக ‘அனராக்’ நிறுவனம் ஆய்வு தெரிவிக்கிறது.விற்பனை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருப்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்த வட்டி விகித சூழல் நிலவி வருகிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ விகிதம் குறைவாக இருந்ததே இதற்கு காரணம்.
குறைந்த வட்டி
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பின் குறைக்கவில்லை என்றாலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இறங்குமுகமாகவே அமைந்தது. பல வங்கிகளில், 7 சதவீதத்திற்கும் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகின்றன. எனவே, தற்போதைய நிலையில் சிறந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. எனினும், வட்டி விகிதம் இதற்கு மேல் குறைய வாய்ப்பில்லை என்பதோடு, வரும் மாதங்களில் வட்டி விகிதம் உயரலாம் என்றும் கருதப்படுகிறது.
பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில் வட்டி விகிதம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்மை காலத்தில் ஒரு சில வங்கிகள், வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ஓரளவு உயர்த்த துவங்கியுள்ளன.ஒரு சில வங்கிகள், வீட்டுக் கடனுக்கான ‘பேஸ்ரேட்’ வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளன.வீட்டுக் கடன் பெற விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த போக்குகளை மனதில் கொள்ள வேண்டும். அதே போல, ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வட்டி விகித உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம்.
திட்டமிடல் தேவை
வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடன் பொறுப்பு என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். வட்டி விகிதம் அதிகரித்தால் மாதத் தவணையும் அதிகரிக்கும் என்பதால், வீட்டுக் கடன் பெற விரும்புகிறவர்கள் தங்களது திரும்பச் செலுத்தும் திறனை கருத்தில் கொள்ள வேண்டும்.
கடனுக்கான மாதத் தவணைகள் வருமானத்தில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருப்பதே நல்லது என கருதப்படுவதால், வாங்க இருக்கும் வீட்டின் மதிப்பு இதற்கேற்ப இருப்பது அவசியம். குறிப்பாக மாறும் வட்டி விகிதத்தை நாடுபவர்கள், வட்டி விகிதம் உயரும் வாய்ப்பையும் சேர்த்தே கணக்கிட வேண்டும்.
கடன் அனுமதியில் ‘கிரெடிட் ஸ்கோர்’ முக்கிய அங்கம் வகிப்பதால், கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், கிரெடிட் ஸ்கோர் போதுமான அளவில் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கடன் பெறும் போது, செலுத்த வேண்டிய முன் பணமாக அதிக தொகை செலுத்துவதும் எதிர்கால சுமையை குறைக்கும்.விண்ணப்பிக்கும் முன், பல்வேறு வங்கிகள் அளிக்கும் கடன் அம்சங்களை ஒப்பிட்டு பார்ப்பதும் அவசியம்.
ஏற்கனவே கடன் பெற்றவர்களை பொருத்தவரை, வட்டி விகிதம் உயர்ந்தால், மாதத் தவணை உயர்வதை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.இதன் சுமையை குறைக்க, கடன் காலத்தை அதிகரிப்பது, அசலில் ஒரு பகுதியை செலுத்துவது போன்ற வாய்ப்புகளை பரிசீலிக்கலாம். அதோடு, வட்டி விகித போக்கின் மீது ஒரு கண் வைத்திருப்பதும் அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|