பதிவு செய்த நாள்
13 பிப்2022
19:43
தங்கம் போலவே அரிய வகை உலோகமான வெள்ளியில், இ.டி.எப்., வடிவில் முதலீடு செய்வதற்கான நிதிகள் அறிமுகம் ஆகி வருகின்றன.
முதலீட்டில் பரவலாக்கத்தை நாடுபவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக, வெள்ளி நிதிகள் அறிமுகம் ஆகத் துவங்கியிருக்கின்றன. அண்மையில், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடன்ஷியல் மியூச்சுவல் பண்ட், நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வெள்ளி நிதிகளை அறிமுகம் செய்துள்ளன. மேலும் பல முன்னணி மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வெள்ளி நிதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இவை தவிர, நிதிகளில் முதலீடு செய்யும், பண்ட் ஆப் பண்ட் திட்டங்களும் இந்த பிரிவில் அறிமுகம் ஆகியுள்ளன.
இ.டி.எப்., வழி
வெள்ளி நிதிகள் மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்றான இ.டி.எப்., வடிவில் அமைந்துள்ளன. குறிப்பிட்ட குறியீடு அல்லது பண்டகத்தை அடிப்படையாக கொண்டு அமைகின்றன. இந்த வகை நிதிகள் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படுவதாக அமைகின்றன. பல வகையான இ.டி.எப்., நிதிகள் உள்ளன.
தங்கத்தை அடிப்படையாக கொண்ட தங்க இ.டி.எப்., நிதிகளும் உள்ளன. இந்த வகையில், வெள்ளியை அடிப்படையாக கொண்ட நிதிகளை அறிமுகம் செய்வதற்கான நெறிமுறைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வெளியிட்டது.
இந்நிலையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வெள்ளி நிதிகளை அறிமுகம் செய்யத் துவங்கியிருக்கின்றன. தங்கம் போலவே வெள்ளியும் அரிய வகை உலோகம் என்பதால், வெள்ளியில் முதலீடு செய்வதற்கான ஏற்ற வழியாக இவை அமைகின்றன.வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு அதன் அளவு பெரிய பிரச்னையாக இருந்து வந்தது.
எனினும் வெள்ளி நிதியின் வாயிலாக எளிதாக முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த நிதிகள் வெள்ளி மற்றும் வெள்ளி சார்ந்த சாதனங்களில் முதலீடு செய்வதால் வெள்ளியின் விலை போக்கிற்கு ஏற்ற பலன் பெறலாம்.
முக்கிய அம்சங்கள்
வெள்ளி நிதியில் முதலீடு செய்ய டிமெட் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதன் பின் ஏற்ற நிதியை தேர்வு செய்து வாங்கலாம்.
தங்கம் போன்ற உலோகம் என்றாலும், வெள்ளி சில மாறுபட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. வெள்ளி ஆபரணங்கள் தவிர, தொழிற்சாலை பணிகளுக்காக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.இதன் தேவை சுழற்சி அடிப்படையில் அமைகிறது.
பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் போது வெள்ளிக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது. ஆனால், பங்குச்சந்தையுடன் வெள்ளியின் தொடர்பு தங்கத்தில் இருந்து வேறுபட்டதாக அமைகிறது. எனவே, பங்குச்சந்தை சரிவுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் முதலீடாக கருதப்படுவதில்லை.
கடந்த பத்தாண்டுகளில் வெள்ளி நல்ல பலனை அளித்திருந்தாலும், கடந்த ஆண்டு சரிவை கண்டது. எனினும் வரும் மாதங்களில் இதன் செயல்பாடு அதிகரிக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். முதலீட்டில் பரவலாக்கத்தை விரும்புகிறவர்கள் வெள்ளி நிதிகளை பரிசீலிக்கலாம். வெள்ளியின் ஏற்ற இறக்கமான தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இ.டி.எப்., முதலீட்டிற்கான வரி விதிப்பு இதற்கும் பொருந்தும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வதும் ஏற்றது என கருதப்படுகிறது.முதலீட்டு தொகுப்பில் வெள்ளியை சுழற்சி தன்மை கொண்ட பகுதியாக இதை கருதலாம். அதற்கேற்ப வெள்ளி நிதிக்கான முதலீடு அளவையும் தீர்மானித்துக்கொள்ளலாம். வெள்ளி நிதிகளின் செயல்பாட்டையும் கவனித்து வருவது முக்கியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|