பதிவு செய்த நாள்
20 பிப்2022
21:22
எல்.ஐ.சி., பொது பங்கு வெளியீடு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘டிமெட்’ கணக்கு துவக்குவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.பங்குச் சந்தை வட்டாரத்தில் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி., பொது பங்கு வெளியீடு மார்ச் மாதம் நிகழும் என கருதப்படுகிறது. அண்மையில், ‘ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ்’ எனப்படும் பங்கு வெளியீட்டிற்கான ஆவணத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான ‘செபி’யிடம் எல்.ஐ.சி., நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
இதன் படி, 5 சதவீத பங்குகளை எல்.ஐ.சி., வெளியிட உள்ளது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடாக கருதப்படும் இந்த பங்கு வெளியீட்டில், எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 5 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக பாலிசிதாரர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் எல்.ஐ.சி., வலியுறுத்தி வருகிறது.
டிமெட் கணக்கு
பொது பங்கு வெளியீட்டில் பங்கேற்க பாலிசிதாரர்கள் தங்கள் ‘பான் கார்டு’ எண்ணை இணைக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பாலிசிதாரர்கள் பங்கு முதலீட்டிற்கான டிமெட் கணக்கும் வைத்திருப்பது அவசியம். டிமெட் கணக்கு என்பது, பங்குகளை ‘டிஜிட்டல்’ வடிவில் வைத்திருப்பதற்கான ‘ஆன்லைன்’ கணக்கு. பங்கு முதலீடு அல்லது வர்த்தகத்தில் பங்கேற்க வேண்டும் எனில், முதலீட்டாளர்கள் டிமெட் கணக்கு வைத்திருப்பது கட்டாயம்.
பொது பங்கு வெளியீடுகளுக்கும் இது பொருந்தும். எனவே, எல்.ஐ.சி., பங்கு வெளியிட்டில் பங்கேற்க விரும்பும் பாலிசிதாரர்கள் தங்களுக்கான டிமெட் கணக்கை துவக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள் டிமெட் கணக்கை எளிதாக துவக்கிக் கொள்ளலாம்.
இந்தியாவில் என்.எஸ்.டி.எல்., மற்றும் சி.டி.எஸ்.எல்., ஆகிய நிறுவனங்கள் டிமெட் வசதியை வழங்கி வருகின்றன. இவை மத்திய காப்பகங்கள் என அழைக்கப்படுகின்றன. டி.பி., எனப்படும் காப்பக பங்கேற்பாளர்கள் வாயிலாக டிமெட் கணக்கு துவக்கலாம். நிதிச் சேவை நிறுவனங்கள் மற்றும் புரோக்கர் நிறுவனங்கள் இதற்கான காப்பக ஏஜன்ட்களாக செயல்பட்டு வருகின்றன. டிமெட் கணக்கு, பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
விண்ணப்ப முறை
டிமெட் கணக்கு துவக்க விரும்பும் முதலீட்டாளர்கள் தாங்கள் விரும்பும் காப்பக ஏஜன்ட் நிறுவனத்தை தேர்வு செய்து, அதன் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். டிமெட் கணக்கை துவக்க விருப்பம் தெரிவித்து, பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்யலாம். இதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனிடையே ஒரு முறை பாஸ்வேர்டும் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு பான் கார்டு, ஆதார் கார்டு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப தகவல்கள் சரி பார்க்கப்பட்ட பின், டிமெட் கணக்கு துவக்கப்படும்.டிமெட் கணக்கு துவக்கப்பட்ட உடன், 16 இலக்க எண் அளிக்கப்படும். இதுவே டிமெட் கணக்கு எண்ணாக கருதப்படுகிறது. கணக்கு துவக்கிய பின், இதில் நுழைந்து பங்கு வர்த்தகத்தில் பங்கேற்கலாம். ஆன்லைன் தவிர நேரடியாகவும் டிமெட் கணக்கு துவக்கலாம்.
பொதுச்சேவை மையங்கள் வாயிலாகவும் டிமெட் கணக்கு துவக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு முதலீடு தொடர்பான விழிப்புணர்வு காரணமாக அண்மை காலத்தில் டிமெட் கணக்குகளும் அதிகரித்துள்ளன. எல்.ஐ.சி., பங்கு வெளியீடு ஆர்வம் காரணமாக இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|