பதிவு செய்த நாள்
25 பிப்2022
21:34
புதுடில்லி:சர்வதேச சந்தையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, இன்னும் ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாகவே உள்ளது.
இருப்பினும், இந்தியாவுக்கான சப்ளையில் எந்த பாதிப்பும் இருக்காது என கூறப்படுகிறது. அதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை கிடைப்பதில் எந்த தட்டுப்பாடும் இருக்காது.ஆனால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையேற்றத்தை, நுகர்வோர் மீது சுமத்த விரும்பும்பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐந்து மாநில தேர்தல்களை ஒட்டி, கடந்த மூன்றரை மாதங்களாக, எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் டீசல் விலையை அதிகரிக்காமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை
தற்போது கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்திருப்பதை அடுத்து, அரசின் மனநிலைக்கு ஏற்ப, விலை உயர்வு நடவடிக்கையை இந்நிறுவனங்கள் எடுக்கும் என கருதப்படுகிறது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கியதை அடுத்து, கடந்த வியாழனன்று, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 105 டாலரை தாண்டியது.
இருப்பினும், நேற்று மதியம் நிலவரப்படி, 101.93 ரூபாயாக குறைந்தது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கும் பட்சத்தில், பணவீக்கம் அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, ஏற்கனவே ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கான 6 சதவீதத்தை தாண்டி விட்டது.
வருவாய் இழப்பு
உலகளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில், மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது விலை அதிகரித்து வருவதால், கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், மத்திய அரசுக்கு 95 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 1 லட்சம் கோடி ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்படும் என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பொருளாதார பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெயின்ட், ரசாயனம், பிளாஸ்டிக், போக்குவரத்து, விமானம் ஆகிய துறைகளில், உள்ளீட்டு செலவு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பணவீக்கம் அதிகரிக்கும்
இந்திய எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையேற்றத்தை நுகர்வோர் மீது சுமத்த விரும்பும்பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலை உயரும். இதன் தொடர்ச்சியாக, பணவீக்கமும் அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|