பதிவு செய்த நாள்
27 பிப்2022
19:19
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால், தொழில் மற்றும் பொருளாதார நோக்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஒரு கண்ணோட்டம்.
கோவிட்--–19 உண்டாக்கிய பொருளாதார பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வருவதற்குள் உக்ரைன், ரஷ்யா இடையிலான மோதல் சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை சர்வதேச அரசியலில் பெரும் தாக்கம் செலுத்துவதோடு, தொழில் மற்றும் பொருளாதார உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை, இந்த நெருக்கடி பொருளாதார நோக்கில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை பார்க்கலாம்.
கச்சா எண்ணெய்
உக்ரைன் நெருக்கடி தீவிரமான நிலையில், கச்சா எண்ணெய் விலையில் தான் உடனடி பாதிப்பு இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை கடந்தது, சற்று குறைந்து உள்ளது. நெருக்கடி இன்னும் தீவிரமானால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரலாம்.
கச்ச எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் உள்நாட்டிலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். உலக அளவில் பண்டகங்களின் விலை அதிகரிப்பது, பணவீக்கம் அதிகரிப்பது போன்றவையும் நிகழலாம். இவை வளர்ச்சி வேகத்தை பாதிக்கும்.எனினும், ரஷ்யா மீதான சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு இன்னும் தீவிரமாகி, அந்நாடு மேற்கத்திய பண பரிவர்த்தனை அமைப்பில் இருந்து விலக்கி வைக்கப்படும் நிலை உண்டானால் பாதிப்பு இன்னும் தீவிரமாகும்.
ஐரோப்பாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் ரஷ்யா முக்கிய பங்கு வகிப்பதால், இத்தகைய நடவடிக்கை பரவலாக பாதிப்பை உண்டாக்கும். கச்சா எண்ணெய் விலை போக்கு நிச்சயம் இந்திய பொருளாதாரம் மீது தாக்கம் செலுத்தும். இறக்குமதிக்கான செலவு அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகமாக்கலாம். இந்திய ரூபாயின் மதிப்பிலும் இது தாக்கம் செலுத்தும்.
விலை உயர்வு
இந்தியாவை பொருத்தவரை, இந்த பிரச்சனையால் இரு தரப்பின் வர்த்தகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதி, 2.7 பில்லியன் டாலராக அமைகிறது. மொத்த ஏற்றுமதியில் இது மிக குறைவான அளவாகவே உள்ளது. பெரும்பாலும் மருந்தக மற்றும் மின்னணு துறையில் இவை அமைந்துள்ளன. எனினும் இந்த நெருக்கடி வர்த்தகத்திலும், வினியோக சங்கிலியிலும் ஏற்படுத்தும் பாதிப்பு பல பிரிவுகளில் விலை உயர்வுக்கு வழி வகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் உலக கோதுமை உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இரு நாடுகளும், 30 சதவீத ஏற்றுமதி கொண்டுள்ளன. போரால் கோதுமை வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டால் கோதுமை விலையில் தாக்கம் செலுத்தும். இந்தியாவுக்கு இது ஏற்றுமதி வாய்ப்பாகவும் அமையலாம் என்றாலும், சர்வதேச போக்கு உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்தலாம். இதனால் கோதுமை பொருட்கள் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
அதே போல இந்த இரு நாடுகளில் இருந்து இந்தியா கணிசமாக சூரிய காந்தி எண்ணெயை இறக்குமதி செய்கிறது. பிரச்னை நீடித்தால் அது சமையல் எண்ணெய் விலையிலும் தாக்கம் செலுத்தும். சோளம், பார்லி போன்ற உணவு பொருட்கள் பிரிவிலும் பாதிப்பு இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நெருக்கடி மேலும் தீவிரமாகாமல் சுமூக தீர்வுக்கு வருவதை பொருத்து பொருளாதார பாதிப்பின் தீவிரமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|