பதிவு செய்த நாள்
17 மார்2022
01:20
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவன ஏற்றுமதி கடனுக்கான வட்டிச் சலுகைக்கு ‘ஆன்லைன்’ வாயிலாக பதிவு செய்யும் நடைமுறை அறிமுகமாகிறது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு முன்னரும், ஏற்றுமதி செய்த பின்னரும் வங்கியில் கடன் பெறும் வசதி உள்ளது.இந்நிலையில் சர்வதேச போட்டியை சமாளிப்பதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முன்னரும், ஏற்றுமதிக்கு பின்னரும் வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி, முறையே 2 சதவீதம் மற்றும் 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
‘ஐ.இ.எஸ்., எனும் இந்த வட்டிச் சலுகைத் திட்டம், 2024, மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது.இந்நிலையில், இந்த திட்டத்தில் தயாரிப்பு துறையைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதிக்கான வட்டிச் சலுகை பெற ‘ஆன்லைன்’ பதிவு அறிமுகமாகிறது.
இது குறித்து அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஐ.இ.எஸ்., திட்டத்தில் பயனாளிகளின் தகவல்களை சேமிக்கவும், திட்டச் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வரும் ஏப்.,1 முதல் ஆன்லைன் பதிவு அறிமுகமாகிறது.
வட்டிச் சலுகை பெற விரும்பும் ஏற்றுமதியாளர்கள் அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் வலைதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.அவர்களுக்கு ஓராண்டு செல்லுபடியாகும் ‘யு.ஐ.என்.,’ எனும் தனி அடையாள எண் வழங்கப்படும். ஏற்றுமதியாளர்கள் இந்த எண்ணை, கடன் விண்ணப்பத்துடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை வங்கி பரிசீலித்து குறைந்த வட்டியில் கடன் வழங்கும்.வரும், ஏப்.,1க்குப் பின், வலைதளத்தில் பதிவு செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே ஐ.இ.எஸ்., திட்டத்தின் கீழ் வட்டிச் சலுகை கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|