பதிவு செய்த நாள்
20 மார்2022
21:49
உக்ரைன் போரால் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு எதிர்பாராத இரட்டை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. போர் சூழலால் மாணவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான இன்னல்கள் ஒரு பக்கம் இருக்க, தாயகம் திரும்பிய மாணவர்களில் கல்வி கடன் பெற்றவர்களுக்கு, அந்த கடனை நிர்வகிப்பது தொடர்பான பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வி கடன் நெருக்கடிக்கு உள்ளான மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் வருமாறு:
கடன் பொறுப்பு:
கல்வி கடன் பெற்ற மாணவர்களும், பெற்றோரும் முதலில் தங்கள் கடன் பொறுப்பை அறிய வேண்டும். வங்கிகள் வர்த்தக நோக்கிலேயே கடன் வழங்குகின்றன. எனவே, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது முக்கியம். போர் போன்ற சூழல்களால், கடன் அல்லது வட்டி தள்ளுபடிக்கான சாத்தியம் இல்லை.
கடன் சீரமைப்பு:
போர் சூழலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தொடர்பாக கடன் பெற்றவர்கள் வங்கிகளை அணுகி தங்களுக்கு உள்ள மாற்று வாய்ப்புகளை பரிசீலிக்கலாம். மாணவர்களின் தனிப்பட்ட சூழலுக்கு ஏற்ப வங்கிகள் கடன் சீரமைப்பு வாய்ப்பை அளிக்கலாம். பல வங்கிகள் இதற்கான ஆலோசனையை அளிக்கத் துவங்கியுள்ளன.
கடன் பாதிப்பு:
கல்வி கடனை திருப்பி செலுத்த முடியாமல் போவதன் பாதிப்பையும் அறிய வேண்டும். இதற்கான அபராதமும் அதிகம் இருக்கலாம். மாணவர்களின் கிரெடிட் ஸ்கோரையும் இது பாதிக்கும். எனவே, இந்த சிக்கலை அலட்சியப்படுத்தாமல், பொருத்தமான மாற்று நடவடிக்கையை திட்டமிட வேண்டும்; கடன் சீரமைப்பையும் நாடலாம்.
கடன் தள்ளிவைப்பு:
இன்னமும் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு உடனடியாக பிரச்னை இல்லை. படிப்பை முடித்து உக்ரைனில் வேலைக்கு காத்திருப்பவர்கள் அல்லது வேலையில் இருப்பவர்கள் நிலை சிக்கலானது. இவர்கள், கடன் தவணையை செலுத்துவதற்கான கூடுதல் அவகாசத்தை கோரலாம்.
அரசு உதவி:
உக்ரைன் நெருக்கடி பரவலான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அரசு தரப்பில் ஏதேனும் உதவி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் நிலையை ஆய்வு செய்து, கடன் பொறுப்பை சமாளிப்பதற்கு ஏற்ற மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|