பதிவு செய்த நாள்
30 மார்2022
20:40
புதுடில்லி:அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட ‘சிட்டி’ குழுமம், இந்தியாவில் நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து வெளியேறுவதாக, கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த வணிகத்தை, ‘ஆக்சிஸ்’ வங்கி வாங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. விரைவில், இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்டி குழுமத்தின் சில்லரை வணிகத்தை, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஆக்சிஸ் வங்கி வாங்க உள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரலில், சிட்டி குழுமம், இந்தியாவின் நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.அதாவது கிரெடிட் கார்டு, சில்லரை வங்கி, வீட்டுக் கடன் மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய, நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
மேலும், நிறுவன வங்கி வணிகத்தை மட்டும் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவித்தது. நுகர்வோர் வங்கி வணிக பிரிவில், சிட்டி வங்கிக்கு, நாடுமுழுக்க 35 கிளைகள் உள்ளன. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.கடந்த மாதம், ஆக்சிஸ் வங்கி, சிட்டி குழுமத்தின் இந்திய சில்லரை வணிகத்தை வாங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது.
சிட்டி குழுமம், இந்தியாவில், கடந்த 1902ம் ஆண்டில் நுழைந்தது. 1985ம் ஆண்டில் நுகர்வோர் வங்கி வணிகத்தை துவக்கியது.நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து வெளியேறினாலும், நிறுவன வங்கி வணிகத்தில் மட்டுமின்றி; மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, குருகிராம் ஆகிய இடங்களில் உள்ள மையங்கள் வாயிலாக, உலகளாவிய வணிகத்தையும் தொடரும் என சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|