பதிவு செய்த நாள்
03 ஏப்2022
19:22
நிதி திட்டமிடலை பரிசீலித்து, தேவையான மாற்றங்கள் செய்வதன் மூலம் நிதி தவறுகளை சரிசெய்வதோடு, இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.
மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ள வேண்டிய நிதி செயல்களுக்கான அவகாசம் முடிந்து புதிய நிதியாண்டு துவங்கியுள்ளது. பலரும், வரி சேமிப்பை கடைசி நிமிடத்தில் மேற்கொண்டு இருக்கலாம். இன்னும் பலர் நிதி செயல்களை நிலுவையில் வைத்திருக்கலாம்.
நிதி திட்டமிடலை முறையாக மேற்கொள்வதன் மூலம், இத்தகைய நிதி அவசரங்களை தவிர்க்கலாம் என்பதோடு, நிதி இலக்குகளை அடைவதற்கான வழிகளையும் பரிசீலிக்கலாம். அந்த வகையில் நிதி திட்டமிடலில் கவனம் செலுத்துவதற்கு பொருத்தமான நேரமாக புதிய நிதியாண்டின் துவக்கம் அமைகிறது.
உங்கள் பட்ஜெட்
நிதி திட்டமிடல் பரிசீலனையை வரவு – செலவு கணக்கு ஆய்வில் இருந்து துவக்கலாம். கடந்த நிதியாண்டின் செலவுகளை ஆய்வு செய்து அவை வருமானத்திற்கு ஏற்ற வகையில் இருந்தனவா என பார்க்க வேண்டும். செலவுகள் அதிகம் இருந்தால் கட்டுப்படுத்தும் வழிகளை ஆராய வேண்டும்.வீண் செலவுகளை கண்டறிந்து தவிர்க்க வேண்டும். இந்த நிதி ஆண்டுக்கான செலவுகளை பட்டியலிட்டு, அவற்றுக்கான தொகையை ஒதுக்க வேண்டும். அதே போல, கடன்கள் இருந்தால் அவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதிக வட்டி கடனை அடைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக நிதி இலக்குகளை பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்திருந்தால், அவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும். புதிதாக நிதி இலக்குகள் இருந்தால் அவற்றுக்கு ஏற்ப சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். முதலீடுகள் அளிக்கும் பலன்களையும், முதலீடு தொகுப்பின் தன்மையையும் சீர் துாக்கிப்பார்ப்பது அவசியம்.
சம்பள உயர்வு வரும் வாய்ப்பு இருந்தால் அதற்கேற்ப சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வீட்டுக்கடன் பெற்றிருந்தால், போனஸ் தொகை கொண்டு அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தி கடன் சுமையை குறைக்கலாம்.
வரி சேமிப்பு
கடந்த ஆண்டு வரி சேமிப்பு திட்டமிடலை கடைசி நேரத்தில் மேற்கொண்டவர்கள், இந்த ஆண்டு துவக்கத்திலேயே அதற்கான ஏற்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். வரி சேமிப்பு முதலீட்டை துவக்கத்திலேயே மேற்கொள்வதன் மூலம், கடைசி நேர தவறுகளை தவிர்ப்பதோடு, இலக்குகளுக்கு ஏற்ற நிதி சாதனங்களில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி., முறையில் துவக்கத்திலேயே முதலீடு செய்து நல்ல பலனையும் பெறலாம். சரியான முறையில் வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொண்டால் வரிச்சலுகையோடு, முதலீட்டின் பலனையும் முழுமையாக பெறலாம். வரி விதிப்பு தொடர்பான மாற்றங்களையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
காப்பீடு தொடர்பான பாதுகாப்பும் போதுமான அளவு அமைந்துள்ளனவா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு மருத்துவ காப்பீட்டின் தேவை அதிகரித்திருக்கிறது. மருத்துவ பாலிசிகளுக்கான விதிமுறைகளும் கடினமாகி இருக்கிறது. விரிவான மருத்துவ காப்பீடு இருப்பதை உறுதி செய்தி கொள்ள வேண்டும்.
எனவே காப்பீடு நிலை குறித்து கவனம் செலுத்துவது அவசியம். முதலீடு பரப்பில், பசுமை மற்றும் நீடித்த வளர்ச்சி நோக்கிலான முதலீடுகள் முக்கியத்துவம் பெற்று வருவதை மனதில் கொள்ள வேண்டும். கிரிப்டோ முதலீடு தொடர்பான பரபரப்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|