பதிவு செய்த நாள்
10 ஏப்2022
19:22
வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் நிலையில், வீட்டுக்கடன் பெறுவது தொடர்பான பரிசீலனையில் இருப்பவர்கள் உடனே முடிவெடுப்பது நல்லது.
வீட்டுக்கடன் பிரிவில் நிலவி வரும் குறைந்த வட்டி விகித போக்கு இன்னும் சில காலம் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. வங்கிகளுக்கு கடன் வழங்கும் ‘ரெப்போ’ விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என, ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ளதால், வீட்டுக்கடனிலும் சாதகமான சூழல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பதினொன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் தற்போதைய நிலை தொடரும் என அறிவித்துள்ளது. எனினும், சர்வதேச சூழல் உள்ளிட்ட காரணங்களால், வரும் மாதங்களில் இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுக்கடன் முடிவு
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த வட்டி விகிதம் நிலவும் சூழலில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இதுவரை இல்லாத அளவு குறைவாக இருக்கிறது. பல வங்கிகள், 7 சதவீதத்திற்கும் குறைவான வட்டியில் கடன் வழங்கி வருகின்றன. உலகளவில் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படலாம் என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே, வட்டி விகிதம் உயர்வதற்கு முன், தற்போதைய வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் பெறுவதற்கான சரியான தருணமாக இது கருதப்படுகிறது.
குறிப்பாக சொந்த வீடு வாங்குவதற்காக திட்டமிட்டு, அது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள், தங்கள் குழப்பத்தை கைவிட்டு முடிவெடுப்பது பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். புதிதாக வீடு வாங்குபவர்கள் இன்னும் சில காலத்திற்கு தற்போதைய விகிதத்திலேயே கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. வீட்டுக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் மற்ற அறிவிப்பும் இதற்கு சாதகமாக உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே கடன் பெற்றவர்கள் தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.
குறிப்பாக, பேஸ் ரேட், எம்.சி.எல்.ஆர்., போன்ற பழைய விகித முறையில் கடன் பெற்றவர்கள், தாங்கள் செலுத்தி வரும் வட்டி விகிதத்தை ஆராய வேண்டும். இது அதிகமாக இருந்தால், தற்போது நடைமுறையில் உள்ள ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட முறைக்கு மாறுவது பலன் அளிக்குமா என பரிசீலிக்கலாம்.
கார் கடன்
இதே போல வாகன கடன் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளவர்களும், தற்போதைய வட்டி விகித சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம். வட்டி விகிதம் உயர்வதற்கு முன் கடன் பெற்றால், தற்போதைய வட்டி விகிதத்திலேயே கடனை செலுத்தலாம். எனவே மற்ற அம்சங்களை பரிசீலித்து விரைவாக முடிவெடுப்பது நல்லது. தனிநபர் கடன்களுக்கும் இது பொருந்தும்.
ஏற்கனவே கடன் பெற்றவர்கள் அதிக வட்டி செலுத்திக் கொண்டிருந்தால், அதை குறைந்த வட்டி விகிதத்திற்கு மாற்றும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.வட்டி விகிதத்தில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என்றாலும், வரும் காலத்தில் வட்டி உயரும் வாய்ப்புள்ளதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். முதலீட்டாளர்களுக்கு இந்த போக்கு சாதகமாக அமையும்.
வரும் மாதங்களில் வட்டி உயர்வு நிகழலாம் எனும் சூழலில், வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் மெல்ல உயரும். முதலில், குறைந்த காலத்திற்கான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயரும். இதை மனதில் கொண்டு முதலீட்டாளர்கள் தங்களுக்கான உத்தியை வகுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|