பதிவு செய்த நாள்
03 மே2022
07:13
புதுடில்லி : கடந்த எப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி, வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.
இம்மாதத்தில், பணவீக்கத்தையும் மீறி உற்பத்தி மற்றும் ஆர்டர்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.‘எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா’ நிறுவனம், ஏப்ரல் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு ஏப்ரலில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 54.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, மார்ச்சில் 54.0 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
மார்ச் மாதத்தில் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்த நிலையில், ஏப்ரலில் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, சற்றே தொய்வாக இருந்த நிலை, விரைவாக மாற்றம் கண்டுள்ளது. இருப்பினும், வேலை வாய்ப்பை பொறுத்தவரை, ஏப்ரலில் மிதமான வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் போர், பொருட்கள் விலை ஏற்றம், போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை காரணமாக, உள்ளீட்டு செலவு இம்மாதத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் விலையை, ஓராண்டில் இல்லாத வகையில் அதிகரித்து, நிலைமையை சமாளித்து உள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|