பதிவு செய்த நாள்
03 மே2022
07:15
மும்பை : இன்றைய அட்சய திருதியை பண்டிகையை ஒட்டி, தங்க ஆபரணங்கள் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு, நகை விற்பனையாளர்களிடம் எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பாதிப்புகள் காரணமாக, தங்க ஆபரணங்கள் விற்பனை சரிவை கண்டு வந்தது. தற்போது பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் அதிகரித்து வருவதை ஒட்டி, இம்முறை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில தரப்பினர், தங்கத்தின் விலை அண்மையில் அதிகரித்துள்ளதை அடுத்து, அது ஒரு தடையாக அமையக் கூடும் என்றும்தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இத்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். அஷிஷ் பெத்தே, தலைவர், அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சில்:தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதை அடுத்து, இம்முறை முன்பதிவு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருவதால், தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு, மற்றும் மக்கள் மனநிலை ஆகியவை காரணமாக, இம்முறை, கடந்த 2019ம் ஆண்டு விற்பனையை விட, 5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.கடந்த ஆண்டு தீபாவளியிலிருந்து அதிகம் பேர் கடைகளுக்கு வருகின்றனர். மேலும், நடப்பு ஆண்டில் ‘குடி பட்வா’வின்போது விற்பனை அதிகரித்துள்ளது.இதனால் இன்று அட்சய திருதியை நாளிலும் அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம்.
பி.ஆர். சோமசுந்தரம், பிராந்திய தலைமை செயல் அதிகாரி, உலக தங்க கவுன்சில்:கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, தங்கத்தின் விலை, உள்நாட்டில் கடுமையாக அதிகரித்து உள்ளது. ஆனாலும், அதையும் மீறி, கொரோனா தடைகள் அகன்று வருவதை அடுத்து, நகை வாங்குவது குறித்த பொதுவான மக்கள் மனநிலை ஏற்றமடைந்துள்ளது.
மேலும், பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க, பண்டிகையின்போது தங்கத்தை வாங்கி இருப்பு வைக்க பலர் விரும்புவர். அதனால் இம்முறை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை, நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,841----------- ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|