பதிவு செய்த நாள்
04 மே2022
21:43
மும்பை:ரிசர்வ் வங்கி, வங்கி களுக்கு வழங்கும்கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நேற்று உயர்த்தி அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கியில் வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு மாதாந்திர தவணை தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், வங்கி பிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம் சற்றும் எதிர்பாராத வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வட்டி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இம்மாதம் 21 முதல் அமல்
ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதாவது, 0.40 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதையடுத்து வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன் இது, 4சதவீதமாக இருந்தது.கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின், முதன் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த வட்டி உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. மேலும், ரொக்க இருப்பு விகிதமும் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, இம்மாதம் 21 முதல் அமலாகிறது.இதுவும் வட்டி விகிதத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக வீடு, வாகன கடன் பெற்றவர்களுக்கு மாதாந்திர தவணை அதிகரிக்கும். ஆனால், பிக்சட் டெபாசிட்தாரர்கள் கூடுதல்வட்டி வருவாயை எதிர்பார்க்கலாம்.
முக்கிய காரணம்
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், மார்ச்சில் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கிறது. இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட அதிகமாகும்.
ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்க இந்த சில்லரை விலை பணவீக்க உயர்வு முக்கிய காரணமாகும்.பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி அதிகரிக்கப்பட்டு உள்ளது.பணவீக்கம், தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டும்பட்சத்தில், வட்டியும் தொடர்ந்துஅதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, இதற்குமுன் இல்லாத வகையில், உலக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, அதன் பாதகமான விளைவுகள், உள்நாட்டுச் சந்தையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் பணவீக்க அழுத்தங்கள் தொடரக்கூடும்
சக்திகாந்த தாஸ்,ரிசர்வ் வங்கி கவர்னர்
பிக்சட் டெபாசிட்தாரர்கள் என்ன செய்யலாம்?
பொதுவாக திடீரென வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, முதலில் குறுகிய கால மற்றும் நடுத்தர கால அளவிலான வைப்பு தொகைகளுக்கு வட்டி அதிகரிக்கும். ஏற்கனவே பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்கள், அதை தொடர்வது பலனளிக்கும்.
மேலும், அதை ஓராண்டு அல்லது அதைவிட குறைவான காலத்துக்கு மாற்றினால், லாபகரமாக இருக்கும். புதிதாக பணம் போடுபவர்களும் குறுகிய காலத்தை பரிசீலிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏற்கனவே பல வங்கிகள் வட்டிவிகிதத்தை அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, அவை மேலும் வட்டியை அதிகரிக்க கூடும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|