பதிவு செய்த நாள்
16 மே2022
05:49
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும்.
கே.வி.ஜானகிராமன்,மயிலாப்பூர்.மற்றவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு உண்டு என்றால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு உண்டு. அவர்கள் வரி செலுத்தவும் வேண்டாம்; ஐ.டி., ரிட்டர்னும் தாக்கல் செய்ய வேண்டாம்.
‘ஹெல்த் இன்சூரன்ஸ்’ பிரீமியத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை கழிவு கோரலாம்.வங்கிகளில் இருந்தும், அஞ்சலக சேமிப்புகளில் இருந்தும் கிடைக்கும் வட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை கழிவு கோரலாம். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தாலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்,படிவங்கள் வாயிலாகவே வருமான வரி செலுத்தலாம்.அவர்கள் இணையம் வழியாக செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இவை மட்டுமின்றி, இன்னும் பல குட்டி குட்டி சலுகைகள் உள்ளன. முழு விபரம் பெற, வருமான வரி வலைதளத்தை அணுகவும்.தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் மாதச் சம்பளக்காரர்களின் சம்பளத்தில், குறிப்பிட்ட தொகைக்கு மேல், 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் வரி விகிதத்தில் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யப்படாததால், கிட்டத்தட்ட மூன்று மாதச் சம்பளம், வருமான வரியாக பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், வியாபாரம் செய்பவர்களும், வசதி படைத்தவர்களும், பிரபலங்களும் தங்களது மூன்று மாத வருமானத்தை வருமான வரியாக செலுத்துவதில்லை.
ஏன் இந்த முரண்பாடு? இதற்கு என்ன தீர்வு?பூச்செல்வம் நடராஜன்,மின்னஞ்சல்; புலவர் வைகை வளவன், மதுரை.பணக்காரர்களும், பிரபலங்களும் வரி செலுத்துவதில்லை என்பது, நம் பொதுப் புத்தியில் படிந்துள்ள பிசுக்கு. யாரோ சொன்னதைக் கேட்டு நம்பிக்கொண்டு இருக்கிறோம்.அடுத்தவர்களோடு ஒப்பிடுவது, நம்மைப் பீடித்துள்ள தேசிய நோய். அதனால், மன நிம்மதி குலைந்து போவது மட்டுமே நிகர பலன்.நமக்கு 30 சதவீத வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் வருகிறது என்றால், அதற்கு நம் தகுதியும், திறமையும் மட்டும் காரணமல்ல; இந்த மண்ணும், இயற்கையும், ஆட்சியாளர்களும் அதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளனர் என்று அர்த்தம்.நாம் செலுத்தும் வரி, நல்ல நிர்வாகம், வளர்ச்சிப் பணிகளுக்கு செலுத்தும் சிறு காணிக்கை அல்லது கட்டணம். இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.
நம் நாட்டில் இருக்கும் அமைதியின் அருமை புரியும்.பல ஆண்டுகளுக்கு முன், ஒரு வங்கியில், ‘டிமேட்’ கணக்கு ஒன்றை துவங்கி, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தேன். ஒரு கட்டத்தில், பெரும்பாலான பங்குகளை விற்று விட்டேன். விற்க முடியாத ஒரு சில பங்குகள் மட்டும் இருந்தன.பின், அந்த கணக்கையே மறந்து விட்டேன். ஒரு கட்டத்தில் வங்கிக்கு போய், அந்த கணக்கை மூடச் சொல்லிவிட்டேன். ஆனால், தற்போது அந்த வங்கியில் இருந்து, என் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்துமாறு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
கணக்கை மூட என்ன செய்ய வேண்டும்?சாந்தி ஸ்ரீனிவாசன்,குரோம்பேட்டை.விற்க முடியாத பங்குகள் கணக்கில் இருந்தன என்று சொல்கிறீர்கள். பிறகு எப்படி அந்த கணக்கை மூட முடியும்? அந்த பங்குகளை வேறு யாருக்கேனும் மாற்றிக் கொடுத்துவிட்டு, காலியாக்கிய பிறகு தான் மூட முடியும்.அதற்கான முறையான கோரிக்கை வைத்து, மூடப்பட்டதற்கான ஆதாரத்தையும் பெற வேண்டும்.ஒரு வேலை செய்யுங்கள். நீங்கள் குறிப்பிடும் வங்கிக்கு சென்று, உங்கள் டிமேட் கணக்கு இன்னும் ‘ஆக்டிவ்’ ஆக இருக்கிறதா, ‘டார்மென்ட்’ ஆக இருக்கிறதா என்று பாருங்கள்.அதில் ஏதேனும் பங்குகள் உள்ளனவா என்பதையும் பாருங்கள். கணக்கில் பங்குகள் இருந்தாலும், இல்லையென்றாலும், அதை முறையாக மூடாதவரை, அதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்தியே தீர வேண்டும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பை செலுத்தி வரும் நிலையில், வருமான வரி விலக்கு பெறுவதற்காக, வி.பி.எப்., எனும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி கணக்கில், ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகத்தின் வாயிலாக செலுத்த வாய்ப்புள்ளதா? ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.
உண்டு. பல நிறுவனங்கள் இத்தகைய வாய்ப்பை பணியாளர்களுக்கு வழங்குவதில்லை. வழக்கமான பி.எப்., தொகையை கணக்கிடுவதோடு, ஒவ்வொரு தனிநபரும், வி.பி.எப்.,பில் எவ்வளவு செலுத்துகிறார் என்று கணக்கு வைத்து, பிடித்தம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், அது தமக்கு சம்பந்தப்படாத, கூடுதல் தொல்லை என்றே பல நிறுவனங்கள் கருதுகின்றன. பணியாளர்களே, நிர்வாகத்தின் வாயிலாக அல்லாமல், நேரடியாகவே பி.எப்., நிறுவனத்துக்கு செலுத்துவதற்கான வழிமுறையை மத்திய அரசு உருவாக்கித் தருமானால், பெரிய சகாயமாக இருக்கும்.இதனால் வருமான வரி விலக்கு கோரவும், வங்கி வட்டியை விட கூடுதல் வட்டியை பெறவும் முடியும்.
காவல் துறையைச் சேர்ந்த இருவர், ‘பிட் காயின் டிரேடிங்’ நிறுவனத்தில், 1.45 கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக போலீஸ் கமிஷனரே கூறுகிறாரே! இத்தொகையை மீட்க முடியாதா? மல்லிகா அன்பழகன்,சென்னை – 78.
முறையாக ‘கிரிப்டோ டிரேடிங்’ தெரிந்தவர்களே, தற்போதைய வீழ்ச்சியில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தவியாய் தவிக்கின்றனர். மேலும், யு.பி.ஐ., வழியாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு, ஆர்.பி.ஐ., மறைமுகத் தடை போட்டுவிட்டதாக ஒரே புலம்பல் வேறு!இந்நிலையில், யாரோ நடத்தும் பிட் காயின் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு என்பதெல்லாம், ஏதோ ராஜா காலத்து கதையைக் கேட்பது போல் இருக்கிறது. போன பணம் போனது தான்; மீட்பதற்கு அது என்ன, களவுபோன தங்க நகையா? குறுகிய காலத்தில் பெரிய கோடீஸ்வரனாகி விடலாம் என்ற நப்பாசையில், தெரிந்தே கொட்டிய பணம்; கடலில் கரைத்த பெருங்காயம்!
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|