பதிவு செய்த நாள்
16 மே2022
05:54
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக அமைந்துள்ள எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகள், நாளை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
சந்தையில் பட்டியலிடப்படும் போது, எல்.ஐ.சி., பங்குகள் பலன் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 'கிரே மார்க்கெட்' என சொல்லப்படும் கள்ளச் சந்தையில், இந்த பங்குகளுக்கான விலை போக்கு இது தொடர்பாக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
பங்கு வெளியீடு
இந்திய ஆயுள் காப்பீடு கழகமான எல்.ஐ.சி., நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு இம்மாதம் 4ம் தேதி துவங்கி, 9ம் தேதி முடிவடைந்தது. நிறுவனத்தில் உள்ள 3.5 சதவீத பங்குகளை, அரசு பொது வெளியீடு வாயிலாக வழங்க தீர்மானித்தது. பொது பங்கு வெளியீட்டில், நிறுவன ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டது. பாலிசிதாரர்கள் பங்கு வெளியீட்டில் பங்கேற்க, 'டிமெட்' கணக்கு பெறுவதும் அவசியம். நாட்டின் மிகப் பெரிய பங்கு வெளியீடு என வர்ணிக்கப்பட்ட இந்த வெளியீடு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் நிதி கழக முதலீட்டாளர்கள் இந்த பங்கு வெளியீட்டிற்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்த பங்கு வெளியீடு, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக விண்ணப்பங்களை ஈர்த்தது. சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் இரண்டு மடங்கு அளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பாலிசிதாரர்கள் மற்றும் ஊழியர்கள் பிரிவிலும் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எல்.ஐ.சி., பங்கு ஒன்றுக்கான விலை வரம்பு 902- - 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு நிறுவனம் சார்பாக குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பட்டியல் பலன்
இந்நிலையில், எல்.ஐ.சி., பங்குகள் நாளை சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலிடப்படும் போது பங்குகள் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய உத்தி பற்றியும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.எல்.ஐ.சி., நீண்ட கால மற்றும் குறுகிய கால நோக்கில் பலன் அளிக்கவல்லது என்று கருதப்படுகிறது. இதனிடையே, கிரே மார்க்கெட்டில் நிறுவன பங்குகளுக்கான விலை போக்கும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் இது அதிகமாக இருந்தது, பங்குச் சந்தை நோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.சந்தையில் பட்டியலிடப்படும் போது பங்கின் விலை பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அமையலாம் என கருதப்படுகிறது. சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு உள்ளிட்ட அம்சங்களும் தாக்கம் செலுத்தலாம். பங்குகள் அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டால், அதற்கேற்ப பட்டியலிடும் ஆதாயம் அமையும்.அதே நேரத்தில் பட்டியலிடப்படும் பலனை மட்டும் பார்க்காமல், முதலீட்டாளர்கள் நீண்ட கால அணுகுமுறையை மனதில் கொள்ள வேண்டும் என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர். அனைத்து விதமான அம்சங்களையும் பரிசீலித்தே முதலீட்டாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.பட்டியலிடப்படும் பலனை மட்டும் பார்க்காமல், சந்தை அம்சங்களுக்கு ஏற்ப காத்திருந்து முடிவெடுக்கும் அணுகுமுறையையும் பின்பற்றுவது பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|