பதிவு செய்த நாள்
02 ஜூன்2022
21:38
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக, 65 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த இலக்கை எட்டும் முயற்சியில், மூன்று முக்கிய நிறுவனங்களை, வரும் மார்ச் மாதத்துக்குள் தனியார்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, நிதியமைச்சகத்தைச் சேர்ந்த முக்கியமான அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டுக்குள் எப்படியும், ‘ஐ.டி.பி.ஐ., வங்கி, பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்களையும் தனியார்மயமாக்கிவிட அரசு முயற்சித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, ‘கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஜிங்க்’ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.முந்தைய நிதியாண்டு பங்கு விலக்கல் இலக்கான 78 ஆயிரம் கோடி ரூபாயை விட, நடப்பு ஆண்டு இலக்கு 18 சதவீதம் குறைவாகவே, அதாவது, 65 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.கடந்த நிதியாண்டில், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு தள்ளிப் போனதால் இலக்கை எட்ட முடியாமல் போனது.
ஆனால், நடப்பு நிதியாண்டில், எல்.ஐ.சி., மற்றும் ஓ.என்.ஜி.சி., பங்கு விற்பனை வாயிலாக 23 ஆயிரத்து 574 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது.இருப்பினும், புவிசார் அரசியல் நிலைமைகள் காரணமாக, தற்போது பங்குச் சந்தை சூழல் சாதகமாக இல்லை. எனவே, பல ஏலதாரர்கள் கூடுதல் அவகாசம் கேட்கின்றனர்.எது எப்படி இருப்பினும், நடப்பு ஆண்டில் இலக்கை எட்டிவிட முடியும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|