பதிவு செய்த நாள்
05 ஜூன்2022
18:57
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு பார்வை.
வைப்பு நிதி முதலீட்டை நாடுபவர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வட்டி விகிதம் உயரத் துவங்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக குறைந்த வட்டி விகித போக்கு நிலவியதால், வைப்பு நிதிக்கான பலனும் குறைவாகவே இருந்தது.
இடைப்பட்ட காலத்தில் வைப்பு நிதி பலன், 40 சதவீதம் சரிந்தது. 2014ம் ஆண்டு அதிகபட்சமாக, 9 சதவீதமாக இருந்த வட்டி பலன் பின்னர், 5.4 அளவில் சரிந்தது. இந்த போக்கு, வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடும் மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
உயரும் விகிதம்
எனினும், தற்போது வட்டி விகித போக்கு மாறத்துவங்கியுள்ளது. அண்மையில் ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நீண்ட காலத்திற்கு பின், 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இதன் காரணமாக கடனுக்கான வட்டி விகிதம் உயரத்துவங்கியுள்ளது. இதே போல, வைப்பு நிதிக்கான வட்டியும் உயரத் துவங்கியுள்ளது. பொதுவாக வட்டி உயரும் போது கடனுக்கான வட்டி விகிதம் உயரும் வேகத்தில், அதற்கேற்ப வைப்பு நிதிக்கான பலன் வேகமாக உயர்வதில்லை.
பெரும்பாலான வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியை 20 முதல் 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்திஉள்ளன. அடுத்து வரும் காலாண்டுகளில், 75 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மெல்ல உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது எப்போது உச்சத்தை தொடும் என்பதும், அதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதும் தெரியவில்லை.
வைப்பு நிதி அளிக்கக் கூடிய பலன் 7 அல்லது 8 சதவீதமாக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சில காலாண்டுகள் தேவைப்படலாம் என கருதப்படுகிறது.
முதலீடு உத்தி
இந்த பின்னணியில் வைப்பு நிதி முதலீட்டிற்கான உத்தி எப்படி இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. வட்டி விகிதம் உயரும் சூழலிலும், எல்லா பிரிவுகளிலும் உயர்வு சீரானதாக இருக்காது என்கின்றனர். பொதுவாக, வட்டி விகிதம் உயரும் சூழலில், நீண்ட கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், குறைந்த கால வைப்பு நிதிக்கான வட்டி விகித உயர்வை விட அதிகம் இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, நீண்ட கால வைப்பு நிதிகள் அதிக பலன் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில், வைப்பு நிதி முதலீடு செய்பவர்கள் அல்லது வைப்பு நிதி முதிரும் நிலையில் உள்ளவர்கள், குறுகிய கால வாய்ப்பை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.
ஓராண்டு அடிப்படையில் முதலீடு செய்து, வட்டி விகிதம் உயர்ந்த பின், அந்த வட்டியில் மீண்டும் முதலீடு செய்து அதிக பலன் பெறும் சாத்தியம் உள்ளது. குறுகிய கால கடன்சார் நிதிகளில் முதலீடு செய்து, பின்னர் வைப்பு நிதியில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். வட்டி விகித போக்கிற்கு ஏற்ப வைப்பு நிதி முதலீட்டை திட்டமிடுவது நல்ல பலன் அளிக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|