பதிவு செய்த நாள்
06 ஜூன்2022
00:11
ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை என்கிறீர்கள். ஆனால், வங்கி வட்டி வாயிலாக 50 ஆயிரம் ரூபாய்வந்தால், வரி கட்ட வேண்டும்என்கிறீர்கள்; எனக்கு ஒன்றும் புரியவில்லையே?
எம்.மேனகா, திருவள்ளூர்.
இப்படி புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வங்கி வட்டியை தவிர வேறு வருமானமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். வைப்பு நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வட்டி வந்தால், நீங்கள் வருமான வரி விலக்கு வரையறைக்குள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.அப்போது, நீங்கள் வருமான வரி கட்ட வேண்டாம். ஒருவேளை வீட்டு வாடகை, ஓய்வூதியம், பங்கு மற்றும் மியூச்சுவல் பண்டு ஈவுத்தொகை போன்ற வரவினங்கள் இருக்குமானால், அப்போது, வங்கி வட்டியையும் ஒரு வரவினமாக அவற்றோடு சேர்க்க வேண்டும்.
இங்கேயும் மொத்த வரவினம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்குமானால், நீங்கள் வருமான வரி கட்ட வேண்டாம். உங்கள் ஆண்டு மொத்த வருவாய் 2.5 லட்சம் ரூபாயை கடக்கும்போது, வருமான வரி கட்ட வேண்டும்.
வங்கியின் வாடிக்கையாளர்கள், ‘விசா, மாஸ்டர் கார்டு, ரூபே’ என பல்வேறு பற்று அட்டைகளை பயன்படுத்தி வரும் நிலையில், மேற்படி ஒவ்வொரு அட்டையின் வாயிலாக, ஏ.டி.எம்.,மில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு எவ்வளவு தொகையை எடுக்க இயலும்?
ரோ.சு.சத்தியமூர்த்தி,திருத்தணி.
‘விசா, மாஸ்டர் கார்டு, ரூபே’ போன்றவை பணப் பரிமாற்ற கேட்வே ஆகும். இதில் விசாவும், மாஸ்டர் கார்டும் வெளிநாட்டு நிறுவனங்கள். ரூபே இந்திய நிறுவனம். வங்கிகள், இந்த நிறுவனங்களோடு இணைந்து கொண்டு, பற்று அட்டைகளை கொடுக்கின்றன. அதாவது, பணம் வங்கிகளுடையது. அதற்கான பரிவர்த்தனை தொழில்நுட்பத்தை இந்த கார்டு நிறுவனங்கள் வழங்கும்.
அதனால், நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி, ஏ.டி.எம்.,மில் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்று வரையறை நிர்ணயித்துள்ளது என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக, ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை, ரொக்கம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
ஓய்வூதியர்களுக்கான ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ வீட்டுக்கடன் பற்றி விளக்கவும்.
எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரம்.
அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நல்ல வாய்ப்பு இது. உங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும். அதில், குறைந்தபட்சம் 20 ஆண்டுகளேனும் நீங்கள் வசித்திருக்க வேண்டும். ஒரு சில வங்கிகள், பரிசாகவோ, வாரிசுரிமை அடிப்படையிலோ வந்த வீடுகளுக்கு, இத்தகைய கடனை கொடுப்பதில்லை. கடனை வாங்கி வீட்டை கட்டு வதற்கு நேர் எதிரான திட்டம் இது.
உங்கள் அந்திம காலத்தில், போதிய வருவாய் இல்லாத போது, வீட்டை ரிவர்ஸ் மார்ட்கேஜில் வைத்தால், மாதாமாதம் பணம் வரும். அதாவது வங்கி உங்களுக்கு ‘இ.எம்.ஐ.,’ செலுத்தும். 10 முதல் 20 ஆண்டுகள் வரை இத்தகைய கடன் கிடைக்கும்.வீட்டை விற்றுவிட்டு வெளியேறவும் வேண்டியதில்லை; யாரை நம்பியும் வாழ வேண்டியதுமில்லை. மாதாமாதம் வரும் பணத்தை கொண்டு, சொந்த வீட்டிலேயே இறுதிக் காலம் வரை மதிப்புடன் வாழலாம். வரும் பணத்துக்கு வரி ஏதும் செலுத்த வேண்டாம்.
குடும்ப தலைவர் மறைந்த பின்னர், அவரது மனைவி இருக்கும் வரை, இ.எம்.ஐ., தொகை வரும். இருவரது மறைவுக்கு பின், ஒருவேளை அவர்களுடைய வாரிசுகள் விரும்பினால், மொத்த கடன் தொகையையும் திருப்பிச் செலுத்திவிட்டு, வீட்டை மீட்டுக் கொள்ளலாம் அல்லது வங்கி, இந்த வீட்டை ஏலத்துக்கு கொண்டுவந்து, தன் முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளும்.
பெரும்பாலும் 1 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகள் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கொடுப்பதில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மறுமதிப்பீடு செய்து, அதன் தரத்தை, வங்கிகள் உறுதி செய்து கொள்ளும். பல வங்கிகளில் இத்திட்டம் உள்ளது. ஆனால், பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை; நீங்களாகப் போய் கேட்க வேண்டும்.
தற்போது, அடுக்குமாடி குடியிருப்பு விளம்பரங்கள் நிறையவருகின்றன. வங்கி வட்டி விகிதம் உயரும் இந்த நிலையில், வீடு வாங்கலாமா?
அலர்மேல் மங்கை,கொட்டிவாக்கம்.
பொதுவாக வாங்க வேண்டாம் என்று தான் சொல்வேன். தற்போதுள்ள சூழலில், கொஞ்சம் மாற்றி யோசிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளதாகவே கருதுகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை, இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்திக் கொண்டே தான் இருக்கும். அதனால், வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் கணிசமாக உயரும். இ.எம்.ஐ., தொகைக்கு பயந்து கொண்டு, பல மத்தியமர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாங்க தயங்குவர். அதனால் குடியிருப்புகளுக்கான டிமாண்டு குறையும்.
இன்னொரு பக்கம், சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் விலையேறியுள்ளதால், கட்டுமான செலவுகள் உயர்ந்துள்ளன. இதனால், புதிய கட்டுமான திட்டங்களை துவக்காமல், கையில் இருக்கும் குடியிருப்புகளை விற்றுவிட்டு, வெளியே வரவே பில்டர்கள் விரும்புவர். உண்மையாகவே வீடு வேண்டும் என்று நினைப்போர், இந்தச் சமயத்தில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கலாம். பில்டர்களிடம் நல்ல பேரம் பேசி, விலையை எவ்வளவு துாரம் குறைக்க முடியும் என்றும் பார்க்கலாம்.
உடனடி பர்சனல் லோன், ‘கேரண்டீடு லோன் அப்ரூவல்’ என்றெல்லாம் சொல்லி நிறைய குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் வருகின்றன; இவற்றை நம்பலாமா?
வி.எஸ்.சந்திரசேகர், கோவை.
உங்களுக்கு உண்மையிலேயே கடன் தேவை என்றால், பொதுத்துறை வங்கிகளை நாடுங்கள். புற்றீசல் போல் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், இடைத்தரகர் ஆகியோர் கடன் சந்தையில் இயங்குகின்றனர். இவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம்.மோசடி நிறுவனங்களை இனங்காண இந்த யோசனைகள் உதவும்: க்ஷ
* யாரேனும் ‘பிராசசிங்’ கட்டணம், ஜி.எஸ்.டி., கட்டணம், இன்ஷூரன்ஸ் கட்டணம் என்றெல்லாம் சொல்லி, முன்பணம் கேட்டால் விலகிவிடுங்கள்.
* ‘உடனே கடன் வாங்குங்கள்; இன்னும் 24 மணி நேரம் தான் இந்த ஆபர்’ என்றெல்லாம் அவசரம் காட்டினால்,ஜாக்கிரதை.
* நிறுவனத்தின் பெயரே புதிதாக இருந்தால், அவசரப்படாமல் அந்நிறுவனத்தைப் பற்றி வலைதளங்களில் தேடிப் பார்த்து, அதன் உண்மை தன்மையை அறிய முயற்சி செய்யுங்கள். பெயர் தெரியாத நிறுவனங்கள், மிகப்பெரிய ஆபத்துக்கு அறிகுறி.
நீங்கள் குறிப்பிட்டது போல் குறுஞ்செய்தி, ‘வாட்ஸ் ஆப்’ செய்தி, மின்னஞ்சல் ஆகியவற்றை அனுப்பும் நிறுவனங்களை, எப்போதும் சந்தேகக் கண்ணோடு அணுகுங்கள். கடன் கொடுக்கும் நிறுவனங்கள், துாண்டில் போட்டுக் கொண்டே தான் இருப்பர். அதில் சிக்காமல் இருப்பது உங்கள் சாமர்த்தியம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
ph:98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|