பதிவு செய்த நாள்
29 ஜூன்2013
00:21
இந்திய உணவுக் கழகம், 45 லட்சம் டன் கோதுமையை, மத்திய அரசு நிர்ணயித்ததை விட, கூடுதல் விலைக்கு ஏற்றுமதி செய்து, சிறப்பான லாபத்தை கண்டுள்ளது. கையிருப்பு:கடந்த சில ஆண்டுகளாக, நாட்டின் கோதுமை உற்பத்தி, உபரியாக உள்ளது. இதனால், இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் இருந்து, 45 லட்சம் டன் கோதுமையை, இரு தவணைகளில் ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியது.இதையடுத்து, ஒரு டன் கோதுமை, சராசரியாக, 312 டாலர் என்ற விலையில், இந்திய உணவுக் கழகம் ஏற்றுமதி செய்துள்ளது. இது, அரசின், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (ஒரு டன்னுக்கு 228 டாலர் வீதம், 20 லட்சம் டன்; 300 டாலர் வீதம், 25 லட்சம் டன்) விட, அதிகமாகும். இதுகுறித்து, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2002-03ம் நிதியாண்டிற்கு பிறகு, சென்ற 2012ம் ஆண்டில் தான், மத்திய அரசு, முதன் முறையாக அதன் முகமை அமைப்புகள் மூலம் கோதுமை விற்பனைக்கு அனுமதி அளித்தது. தொடர்ந்து கோதுமை உற்பத்தியும், கொள்முதலும் அதிகரித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. சர்வதேச சந்தை முதல் இரண்டு தவணைகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமைக்கு, சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 40.30 லட்சம் டன் கோதுமை, இரு கட்டங்களாக, தென்கொரியா,எத்தியோப்பியா, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் ஏமன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து மேலும், 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நடப்பு ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, அரசு முகமை அமைப்புகளின் கிடங்குகளில், 7.77 கோடி டன் கோதுமை கையிருப் பில் உள்ளது. இது, தேவைப்படும், 2.01 கோடி டன்னை விட அதிகமாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கோதுமையின் தரம், உலகின் மிகச் சிறந்த, ஆஸ்திரேலிய கோதுமைக்கு நிகராக உள்ளதால், அதன் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இதற்கு, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் காரணம் எனலாம். இந்திய கோதுமையில், ரசாயன அளவு குறித்த ஆய்வை அரியானாவில் உள்ள கர்னால் கோதுமை ஆய்வு இயக்குனரகம் மேற்கொண்டது. இத்துடன், வெளிநாட்டு பிரதிநிதிகள், இந்தியாவிற்கு வந்து, கோதுமையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு திருப்தி தெரிவித்தனர். இயந்திரமயம்:இதையடுத்தே, கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. குஜராத்தின் முந்த்ரா மற்றும் கன்ட்லா துறைமுகங்கள் வழியாக, பெரும்பான்மை கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.ஏற்றுமதிக்கான கோதுமையை கையாள்வதில், முற்றிலும் இயந்திரமயத்தை புகுத்தினால், சர்வதேச போட்டியை சமாளித்து, மேலும் அதிக அளவில் அதனை ஏற்றுமதி செய்யலாம் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|