பதிவு செய்த நாள்
12 ஜூலை2013
00:40
சர்வதேச சந்தைகளில், இயற்கை ரப்பர் விலை சரிவடைந்து வரும் நிலையில், இந்தியாவில், அதன் விலை உயர்ந்து வருகிறது.ரப்பர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள கேரளாவில், கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், உள்நாட்டு சந்தையில் ரப்பர் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்து வருகிறது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம், ஒரு கிலோ, ஆர்.எஸ்.எஸ்-4 ரக இயற்கை ரப்பரின் விலை, 177 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 192 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலையில் கூட, சந்தைகளில் ரப்பர் ஷீட்டுகள் கிடைப்பது கடின மாக உள்ளதாக, அவர்கள் மேலும் கூறினர்.அதே சமயம், இதே காலத்தில், பாங்காக் சந்தையில், ஒரு கிலோ இயற்கை ரப்பர் விலை, 168 லிருந்து, 155 ரூபாயாக குறைந்துள்ளது.
கேரளாவில், வழக்கமான மழைப் பொழிவில், கிட்டத்தட்ட 75 சதவீதம், கடந்த மூன்று வாரங்களில் பெய்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத மழையால், ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூன் மாதம், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 64 ஆயிரம் டன்னாக இருக்கும் என, ரப்பர் வாரியம் மதிப்பிட்டிருந்தது. ஆனால், 35,000 - 40,000 டன் என்ற அளவிற்கே இயற்கை ரப்பர் உற்பத்தியானது.
சென்ற, 2012ம் ஆண்டு ஜூன் மாதம், 62 ஆயிரம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப் பட்டது.கடந்த ஆண்டு, ஒரு கிலோ ரப்பர் விலை, 200 ரூபாயை தாண்டியதை அடுத்து, அது சார்ந்த பொருட்களை தயாரிக்கும், 500க்கும் மேற்பட்ட, சிறிய மற்றும் நடுத்தர ரப்பர் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்தால், இயற்கை ரப்பர் விலை மேலும் உயர்ந்து, அது சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதை தவிர்க்க, ரப்பர் இறக்குமதி தான் ஒரே தீர்வு என, மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (அட்மா) தெரிவித்து உள்ளது. கிட்டத்தட்ட கிலோவுக்கு, 40 ரூபாய் வித்தியாசம் இருப்பதால், இயற்கை ரப்பர் இறக்குமதி தான் லாபகரமானது என, இத்துறை சார்ந்தவர் களும் தெரிவித்துள்ளனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|