பதிவு செய்த நாள்
12 ஏப்2014
14:05
புதுடில்லி : அண்மையில் முடிவுற்ற 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, 3,346 கோடி டாலராக (2 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த 201213ம் நிதியாண்டில், 5,579 கோடி டாலர் (3.35 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.சென்ற நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் விளைவாக, தங்கம், வெள்ளி இறக்குமதி, அந்நிதியாண்டில், வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, சென்ற மார்ச் மாதத்தில், இவற்றின் இறக்குமதி, 17.27 சதவீதம் சரிவடைந்து, 3,333 கோடி டாலரிலிருந்து, 2,758 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி இறக்குமதி சரிவடைந்துள்ளதையடுத்து, கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த வர்த்தக பற்றாக்குறை, 13 ஆயிரத்து 860 கோடி டாலராக குறைந்துள்ளது.
சென்ற 2012 – 13ம் நிதியாண்டில், முன் எப்போதும் இல்லாத வகையில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதற்கு, அதிகளவில், தங்கம், வெள்ளி, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பொறியியல் சாதனங்கள் இறக்குமதி செய்ததே முக்கிய காரணம். நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது, அன்னிய செலாவணி வரத்தை காட்டிலும், வெளியேற்றம் அதிகமாகும் போது ஏற்படுகிறது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் போது, அது, ரூபாய் மதிப்பின் சரிவிற்கு வழிகோலுகிறது. தங்கம், வெள்ளி இறக்குமதி வீழ்ச்சி கண்டுள்ளதால், ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், 8.82 சதவீதம் சரிவடைந்து, 3,952 கோடி டாலராக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, இவற்றின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|