பதிவு செய்த நாள்
19 ஜூன்2014
12:44
சென்னை: 'சிமென்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் விலை உயர்வு காரணமாக, வீடுகளுக்கான கட்டுமான செலவு ஒரே வாரத்தில், சதுர அடிக்கு, 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது' என, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தமிழகம், புதுச்சேரிக்கான மாநில தலைவர் சேகர், அகில இந்திய முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: லாரிகளில் அதிக பாரம் ஏற்ற விதிக்கப்பட்ட தடையால், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்வதாகக் கூறி சிமென்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டு மான பொருள்களின் விலை, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு, 70 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜல்லிகள் விலை, 30 சதவீதமும், மணல் விலை, 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன.
கட்டுமான செலவு
இதன் காரணமாக, வீடுகளுக்கான கட்டுமான செலவு ஒரு சதுர அடிக்கு, 300 முதல், 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர், வாங்கும் வீடுகளுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக செலவிட வேண்டும். இதேபோன்று சிமென்ட் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு தடை விதித்து, இறக்குமதிக்கு வரி சலுகை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இறக்குமதிக்கு...
இதேபோல், சிமென்ட் இறக்குமதிக்கும் வரிச்சலுகைகள் வழங்க வேண்டும். விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். தமிழக முதல்வர், இங்குள்ள உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி, விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|