பதிவு செய்த நாள்
22 ஜூலை2014
02:24
சேலம் :மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த உளுந்து மற்றும் உளுந்தம் பருப்பின் வரத்தில், கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால், ஒரே வாரத்தில், உளுந்து விலை குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
வறட்சி:தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக, உளுந்து விளைச்சல், எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழக பருப்பு ஆலைகளுக்கு தேவையான உளுந்து, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்தே வரத்தாகிறது.வடமாநிலங்களில் இருந்து வாரத்துக்கு, 300 லாரிகள் வரை, உளுந்து, உளுந்தம் பருப்பு ஆகியவை, விற்பனைக்கு வருவது வழக்கம்.ஆனால், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், நடப்பாண்டு எதிர்பார்த்த அளவு, உளுந்து விளைச்சல் இல்லாததோடு, அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநில அரசுகள், பல மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்துள்ளன. அதனால், அங்கிருந்து விற்பனைக்கு வந்து கொண்டிருந்த உளுந்து, உள்ளூர் தேவையை காரணம் காட்டி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதனால், தமிழகத்தின் பெரிய சந்தைகளாக கருதப்படும் சென்னை, சேலம் லீபஜார், விருதுநகர் ஆகிய இடங்களுக்கு, வாரத்துக்கு, 50 லாரிகளில் மட்டுமே, உளுந்து, உளுந்தம் பருப்பு, விற்பனைக்கு வருகிறது.இந்நிலையில், பெரிய வியாபாரிகள், பிரபல பருப்பு தயாரிப்பு நிறுவனங்கள், மொத்தமாக உளுந்து, உளுந்தம் பருப்பை கொள்முதல் செய்து விடுகின்றன.
சில்லரை விற்பனை:இதனால், சந்தையில், உளுந்தம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயர்ந்து வருகிறது. ஜூலை, 11ம் தேதி, முதல் ரக உளுந்தம் பருப்பு குவிண்டால், 8,200 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 7,800 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 7,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டது.
இந்நிலையில், ஜூலை 12ம் தேதி குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய் உயர்ந்தது.நேற்று முன்தினம், முதல் ரகம், 9,200 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 8,800 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 8,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த விலையில், மேலும், 1,000 ரூபாய் உயர்வு ஏற்பட்டு, முதல் ரக உளுந்து குவிண்டால், 10,200 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் குவிண்டால், 9,800 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் குவிண்டால், 9,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, சில்லரை விற்பனையில் உளுந்து விலை, ஒரே வாரத்தில் கிலோவுக்கு, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இதையடுத்து, முதல் ரக உளுந்து கிலோ, 105 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 102 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. உளுந்தம் பருப்பின் வரத்து, தேவையை ஈடு செய்யும் அளவிற்கு இல்லாததால், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
சூப்பர் மார்க்கெட்:சேலம் லீபஜார் பருப்பு வியாபாரி மூர்த்தி கூறியதாவது:தமிழக ஆலைகள் மற்றும் சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த உளுந்து, உளுந்தம் பருப்பை, பெரிய வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட்களை நடத்தும் நிறுவனங்கள், மொத்தமாக கொள்முதல் செய்து கொள்கின்றனர். இதனால், மார்க்கெட்டில், உளுந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், பண்டிகைகள், திருமண காலம் துவங்க உள்ள நிலையில், உளுந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், அதன் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|