பதிவு செய்த நாள்
29 ஜூலை2014
01:54
புதுடில்லி,: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 43,425 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.இதன்படி, வரும் செப்டம்பர் மாதத்தில், மேற்கொள்ளப்படவுள்ள ‘செயில்’ நிறுவனத்தின் பங்கு விற்பனையை, ஆபர் பார் சேல் (ஓ.எப்.எஸ்.,) எனப்படும், கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனை திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வரவேற்புமேலும், இந்நிறுவனத்தின் பங்குகளை, அதிகளவில் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.ஓ.எப்.எஸ்., பங்கு விற்பனைக்கு, முதலீட்டாளர் களிடையே அதிக வரவேற்பு காணப்படுவதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. புதிய பங்கு மற்றும் தொடர் பங்கு வெளியீட்டை காட்டிலும், கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனையை, விரைவாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ள முடியும்.
இதன் காரணமாக, இவ்வகையில் பங்கு விற்பனையை மேற்கொள்வது குறித்து, பங்கு விலக்கல் துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் பங்குச் சந்தை பிரிவு, ‘செபி’ அமைப்பிடம் ஆலோசித்து வருவதாக, நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மின்துறை:நடப்பு நிதியாண்டில், பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் முதல் பொதுத் துறை நிறுவனமாக, ‘செயில்’ உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம், இந்நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள் (20.65 கோடி பங்குகள்), ஓ.எப்.எஸ்., முறையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு, 1,800 கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஓ.என்.ஜி.சி., பங்கு விற்பனையில், 18 ஆயிரம் கோடியும், கோல் இந்தியா நிறுவன பங்கு விற்பனையில், 23 ஆயிரம் கோடி ரூபாயும் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.இவைதவிர, மின்துறையைச் சேர்ந்த, என்.எச்.பி.சி., ஆர்.இ.சி., மற்றும் பி.எப்.சி., ஆகிய நிறுவனங்களின், பங்கு வெளியீடுகள் மூலமும், குறிப்பிட்ட அளவு தொகை திரட்டப்பட உள்ளது.
புதிய விதிமுறை:மூலதனச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில், புதிய விதிமுறைகளை, ‘செபி’ அமைப்பு, கடந்த மாதம் வெளியிட்டது. அதில், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும், பொதுமக்களின் பங்கு மூலதனம், 25 சதவீதம் இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாத பட்சத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட வரம்பை நிறுவனங்கள் எட்ட வேண்டும் என, தெரிவித்துள்ளது.
தற்போது, 36 பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.இதனால் இந்நிறுவனங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|