பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
03:50
‘பத்திர பதிவுத்துறை துவங்கப்பட்டு, 150 ஆண்டு நிறைவடையும் நிலையில், வருவாய் இலக்கை எட்ட முடியாமல், இத்துறை தத்தளிக்கிறது.நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் தொடர்பான குறைபாடுகளை சரி செய்தால் மட்டுமே, இத்துறையை மேம்படுத்த முடியும்’ என, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழிகாட்டி மதிப்பு:தமிழகத்தில் நிலங்களுக்கான, அரசின் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள், 2012 ஏப்ரல், 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இது ஏற்கனவே அமலில் இருந்த, பழைய மதிப்பை காட்டிலும், பல மடங்கு அதிகமாக உள்ளது.நிலம், வீடுகளின் விலை, வெகுவாக அதிகரித்துள்ள சூழலில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர், சொந்த வீடு வாங்கும் திட்டத்தையே தள்ளிப்போட வேண்டிய சூழல் உருவானது.
இதனால், சொத்து விற்பனை தொடர்பான பத்திரப் பதிவுகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. புதிய வழிகாட்டி மதிப்பு அமலாவதற்கு முன், 2011 – 12ம் நிதி ஆண்டில், தமிழகம் முழுவதும், 35.18 லட்சம் ஆவணங்கள் பதிவாகின.புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வந்த பின், 2012 – 13ம் நிதி ஆண்டில், 26.90 லட்சம் ஆவணங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன.
இந்த வீழ்ச்சி, 2013 – 14ம் நிதியாண்டிலும் தொடர்ந்ததால், பத்திரப் பதிவுத் துறையால் வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2012 – 13 விட, 2013 – 14ல் பத்திரப்பதிவுகள் வாயிலாக கிடைக்கும் வருவாய், 17.62 சதவீதம் அதிகரிக்கும் என்றும், இதனால், அரசுக்கு, 9,874 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது.ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பத்திரப் பதிவுகள் இல்லாததால், இந்த வருவாய் இலக்கில், 652.24 கோடி ரூபாயை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு, நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளது.
காரணம் என்ன?புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில், பல இடங்களில் குளறுபடிகள் இருப்பதே, பத்திரப்பதிவு குறைய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.தற்போதைய நிலவரப்படி, பொதுமக்கள் மத்தியில் வழக்கமாக நடக்கும் நில பரிமாற்றத்துக்கான பத்திரப்பதிவுகள், முற்றிலுமாக குறைந்து விட்டன. வங்கிக்கடன் வாயிலாக, கட்டுமான நிறுவனங்களிடமிருந்து வீடு வாங்குவது தொடர்பான பத்திரப்பதிவுகளே தற்போது நடந்து வருகின்றன.
இதனால், முன் எப்போதும் இல்லாத வகையில் வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலையில் பத்திரப்பதிவு துறை தத்தளிக்கிறது.இத்துறை துவங்கப்பட்டு, 150 ஆண்டு நிறைவடையும் நிலையில், இப்பிரச்னைகளை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அரசின் அறிவிப்புக்காக இத்துறையினரும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் கோரிக்கை
பத்திரப்பதிவுத் துறையில் பணியாளர்கள், பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் தரப்பில் எழுந்துள்ள கோரிக்கைகள் விவரம்: நிலங்களின் வழிகாட்டி மதிப்புடன் அவற்றுக்கான வில்லங்க விவரங்களையும் இணையதளம் வாயிலாக பொதுமக்கள் எளிதில் பார்ப்பதற்கான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் சார் – பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெறுவதிலும் இணைய வழியாக பெறும் வில்லங்க சான்றிதழில் அளிக்கப்படும் விவரங்களுக்கான எழுத்து வடிவத்தை பெரியதாக மாற்ற நடவடிக்கை, எடுக்க வேண்டும். கணினிமயமாக்கப்பட்ட பின், சொத்து பதிவு ஆவண பிரதிகள், ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இதற்கு முந்தைய ஆவண பிரதிகளை, ‘மைக்ரோ பிலிம்’ வடிவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 2007 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆவண எழுத்தர் நல நிதியம் இன்னும் செயலாக்கம் பெறவில்லை. இதை செயல்படுத்துவதுடன் போலி ஆவண எழுத்தர்களை கட்டுப்படுத்தி நில மோசடிகளை தடுக்க வேண்டும். இத்துறையில் மண்டல, மாவட்ட, சார் – பதிவாளர், எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் என பல்வேறு நிலைகளில், 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பவும், தேவை அடிப்படையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும் அரசின் நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|