பதிவு செய்த நாள்
15 செப்2014
06:45
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 1.52 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,91,93,000 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 4,84,56,000 கோடி டன்னாக இருந்தது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சி:அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:உள்நாட்டில், 13 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இதில், 9 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு அதிகரித்தும், 4 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு சரிவடைந்தும் உள்ளன.தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்களுள், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 6.87 சதவீதம் சரிவடைந்து, 43.14 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 46.32 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது.
அதேசமயம், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.08 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25.18 லட்சம் டன்னிலிருந்து, 26.46 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மேலும், காமராஜர் துறைமுகம் (முன்பு எண்ணுார்) கையாண்ட சரக்கும், 2.28 சதவீதம் அதிகரித்து, 23.21 லட்சம் டன்னிலிருந்து, 23.74 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.கோல்கட்டாவில் உள்ள, கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கு, 12.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10.62 லட்சம் டன்னாகவும், மற்றும் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 1.65 சதவீதம் உயர்ந்து, 25.20 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளன.மதிப்பீட்டு மாதத்தில் பாரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கு, 3.33 சதவீதம் உயர்ந்து, 59.14 லட்சம் டன்னிலிருந்து, 61.11 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
உயர்வு:இதே போன்று, விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும், 3.25 சதவீதம் அதிகரித்து, 49.18 லட்சம் டன்னிலிருந்து, 50.78 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும், 17.15 சதவீதம் உயர்ந்து, 19.48 லட்சம் டன்னிலிருந்து, 22.82 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், நியூமங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 6.40 சதவீதம் குறைந்து, 28.76 லட்சம் டன்னிலிருந்து, 26.92 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில்...:கணக்கீட்டு மாதத்தில், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, 6.79 சதவீதம் உயர்ந்து, 8.40 லட்சம் டன்னிலிருந்து, 8.97 லட்சம் டன்னாகவும், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.26 சதவீதம் அதிகரித்து, 52.65 லட்சம் டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.அதேசமயம், ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கு, 1.49 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 53.75 லட்சம் டன்னிலிருந்து, 52.95 லட்சம் டன்னாகவும், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.39 சதவீதம் குறைந்து, 86.91 லட்சம் டன்னிலிருந்து, 86.57 லட்சம் டன்னாகவும் சரிவடைந்துள்ளன.இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|