பதிவு செய்த நாள்
16 செப்2014
00:40
மும்பை: சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், டீசல் மீதான விலை நிர்ணய கட்டுப்பாட்டை, முழுவதுமாக விலக்கிக் கொள்ள, மத்திய அரசுக்கு இதுவே சரியான தருணம் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.‘பிக்கி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது:கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்பது, அதை அதிகளவில் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நாடுகளுக்கு, பேருதவியாக அமைந்துள்ளது. இதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவதோடு, மானியங்கள் மற்றும் பணவீக்கமும் குறையும்.
இச்சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, மத்திய அரசு, டீசல் விலை கட்டுப்பாட்டை கைவிடுவதோடு, டீசலுக்கான மானியத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.மேலும், எண்ணெய் நிறுவனங்களின் வசமே, டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.பிரதமர் மக்கள் நிதி திட்டம், மிகவும் சிறப்பானது. இத்திட்டத்தில், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், வங்கிகள் அவசரம் காட்டாமல், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தில், சமரசத்திற்கு இடமளிக்க கூடாது என, வங்கிகளை கேட்டுக் கொண்டார்.போலி கணக்குகள், பரிவர்த்தனை நடைபெறாதது மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் மோசமான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தால், இத்திட்டம் பயனற்ற ஒன்றாகி விடும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.கடந்த ஜூன் மாதம் முதல், பிரண்ட் கச்சா எண்ணெய் விலை, 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதையடுத்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 96.38 டாலராக குறைந்துள்ளது.இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள், மாதத்திற்கு ஒரு முறை டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தி வருகிறது. இதனால், ஒரு டீசல் விற்பனையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, முன் எப்போதும் இல்லாத அளவில், 8 காசாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|