பதிவு செய்த நாள்
23 செப்2014
14:33
சேலம் :புரட்டாசி மாதம் எதிரொலியாக, தமிழக உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அசைவ உணவு வகைகளின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், காய்கறி விற்பனை, 3,120 டன்னாக அதிகரித்துள்ளது.
அசைவ உணவு: தமிழகத்தில் பொதுவாக புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அசைவ பிரியர்களில், 80 சதவீதத்தினர் சைவத்துக்கு மாறி விடுகின்றனர். இதனால், அசைவ உணவு வகைகளான ஆட்டுக்கறி, மீன், கோழி உள்ளிட்டவற்றின் விற்பனை குறைந்து, விலையும் அதிரடியாக சரிவடைவது வழக்கம்.அதே நேரத்தில், சைவ உணவுகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்து, அவற்றின் விலையும் உயரும்.
தமிழகம் முழுவதும் உள்ள, 179 உழவர் சந்தைகளில் கடந்த மாதம் வரை, தினந்தோறும் சராசரியாக, 9,739 விவசாயிகள் மூலம், 6.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,659 டன் காய்கறி, பழம் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை, 4.84 லட்சம் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். புரட்டாசி மாதம் பிறந்துள்ளதை அடுத்து, உழவர் சந்தைகளுக்கு வரும் நுகர்வோரின் எண்ணிக்கை, 5.7 லட்சமாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, காய்கறிகளின் விற்பனை, 3,120 டன்னாகவும், அவற்றின் மதிப்பு, 6.90 கோடி ரூபாயையும் எட்டியுள்ளது.
இதேப்போல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள, அம்மா பசுமை காய்கறி அங்காடிகளிலும், புரட்டாசி மாதம் எதிரொலியாக காய்கறிகளின் விற்பனை, 25 சதவீதம் வரை, அதிகரித்துள்ளது.
வரத்து அதிகரிப்பு
இதுகுறித்து, உழவர் சந்தை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புரட்டாசி மாதம் பிறந்த பின், உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோரின் எண்ணிக்கை, 35 சதவீதம் வரை, அதிகரித்துள்ளது, காய்கறி விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிக அளவில் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவதால், தற்போதைக்கு விலை உயர்வு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|