பதிவு செய்த நாள்
20 நவ2014
00:23
புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தை பருவத்தில் (அக்.,–செப்.,), இந்தியாவின் காபி ஏற்றுமதி, 50.20 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை=60கிலோ) அதிகரிக்கும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டி.ஏ.,) தெரிவித்துள்ளது. இது, முந்தைய பருவத்தில், 48 லட்சம் மூட்டைகளாக இருந்தது.
சர்வதேச சந்தையில், இந்திய காபியின் விலை இன்னும் அதிகரித்தே காணப்படுகிறது. அதேசமயம், இதற்கான தேவையும் மந்தமாகவே உள்ளது. புதிய காபி வரவை எதிர்பார்த்து, வியாபாரிகள் அதிகளவில் இதனை கொள்முதல் செய்யாமல் உள்ளனர்.காபியின் பண்ணை விலை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 35 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.
குறிப்பாக, கடந்தாண்டில், 50 கிலோ அராபிகா காபியின் பண்ணை விலை, 6,393 ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு செப்டம்பரில், 9,712 ரூபாயாக அதிகரித்உள்ளது.இதே போன்று, 50 கிலோ எடை கொண்ட ரோபஸ்டா வகை காபியின் விலையும், 2,945லிருந்து, 3,384 ரூபாயாக உயர்ந்துள்ளது.
எனினும், பண்ணையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், இன்னும் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால், காபியை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளனர் என, யு.எஸ்.டி.ஏ., தெரிவித்துள்ளது.கையிருப்பு அதிகரித்துள்ளதையடுத்து, நடப்பாண்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த காபி சப்ளை, 83 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்தாண்டில், 81.50 லட்சம் மூட்டைகளாக இருந்தது.
வேளாண் நடைமுறைகள் மேம்பட்டுள்ளதையடுத்து, கர்நாடகாவில், ரோபஸ்டா காபி உற்பத்தி, கடந்தாண்டை விட சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உற்பத்தி சரிவடையும் என்ற நிலைப்பாட்டால், அராபிகா காபி உற்பத்தி குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு 2014–15ம் சந்தைப் பருவத்தில், காபி உற்பத்தி, 51 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2013–14ம் பருவத்தில், 50.70 லட்சம் மூட்டைகளாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|