பதிவு செய்த நாள்
17 டிச2014
12:57
சேலம்: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி, இந்தியாவில், பெட்ரோல், டீஸல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயில், டயர், உதிரிபாகங்களின் விலை குறையாதது, லாரி, பஸ், உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்ததையில், ஜூன் மாதம், கச்சா எண்ணெய் பீப்பாய், 107 டாலருக்கு விற்றது, தற்போது, 70 டாலராக குறைந்துள்ளது. இந்த சரிவால் ஆயில் நிறுவனங்கள், இந்தியாவில் டீசல் விலையில் லிட்டருக்கு, 6.82 ரூபாயும், பெட்ரோலுக்கு லிட்டருக்கு, 11.75 ரூபாய் வரை விலை குறைப்பு செய்துள்ளன. இந்த குறைப்பு மோட்டார் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ள நிலையில், கச்சா எண்ணெயை மூலப்பொருளாக கொண்டு தயார் செய்யப்படும், ஆயில், டயர்கள், உதிரிபாகங்களின் விலை குறைப்பு செய்யப்படும் என, எதிர்பார்ப்பு நிலவியது.
லாரி, பஸ் உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு மாறாக, ஆயில், டயர், உதிரிபாகங்களின் விலை எவ்வித குறைப்பும் செய்யவில்லை. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விற்பனை செய்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஆயிலை லிட்டர், 150 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையிலும், லாரிகளின் முன்பக்க ரேடியல் டயர் ஜோடி, 42,000 ரூபாய்க்கும், பின்பக்க டயர் ஜோடி, 44,000 முதல், 45,000 ரூபாய் வரை விற்கிறது. உதிரிபாகங்களின் விலை, எவ்வித குறைப்பும் செய்யப்படாமல், பழைய விலைக்கே விற்கிறது.
கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு, 45 டாலர் வரை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும், ஆயில், டயர், டியூப், உதிரிபாகங்களின் விலை, 20 முதல், 28 சதவீதம் வரை, குறைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், விலை குறைப்பு செய்யாதது லாரி, பஸ் உரிமையாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சென்னகேசவன் கூறியதாவது: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், கடந்த, 2011 செப்டம்பரில், கச்சா எண்ணெய் விலை, 87 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் டீசல் விலை லிட்டர், 40.52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அதை விட குறைந்து, 70 டாலருக்கு விற்கிறது. டீசல் விலையை லிட்டர், 40 ரூபாய்க்கும், பெட்ரோல் விலையை லிட்டர், 55 ரூபாய்க்கும் தான் விற்பனை செய்ய வேண்டும். ஆயில் நிறுவனங்கள் பெட்ரோல், டீஸல் விலையை குறைப்பு செய்த நிலையில், மத்திய அரசு, உற்பத்தி வரியை அதிகரித்து விட்டதால், விலை குறைப்பு எதிர்பார்த்த அளவு இல்லை.
கச்சா எண்ணெய்யை மூலப்பொருளாக பயன்படுத்தி, பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்படும் போதெல்லாம், தங்களின் தயாரிப்பு பொருட்களின் விலையையும் உயர்த்திக் கொள்கின்றன. கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆயில், டயர், உதிரிபாகங்களின் விலையில் எவ்வித குறைப்பும் செய்யப்பட வில்லை. அதே நேரத்தில், டீஸல் விலை உயர்வை காரணம் காட்டி, லாரி வாடகை குறைக்கப்பட்டுள்ளது. இது, லாரி உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஆயில், டயர், உதிரிபாகங்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|