பதிவு செய்த நாள்
27 டிச2014
15:50
திருப்பூர் : 'தொழில் துவங்குவதற்கும், வளர்ச்சிக்கும் உள்ள அனைத்து தடைகளும் தகர்த்து எறியப்படும்; வரும் 29ல், டில்லியில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், அதற்கான உறுதியான முடிவு எடுக்கப்படும்,'' என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். திருப்பூரில் நடந்த 'வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கோவை, திருப்பூர் பகுதிகள் இயற்கையாகவே தொழில் வளம் மிகுந்ததாகவும், திறமையான தொழிலாளர்கள், தொழிலதிபர்களாலும் வளர்ச்சி அடைந்துள்ளன. நாம், எதற்கெடுத்தாலும், சீனா பொருட்களை பற்றி பேசுகிறோம்; அதற்கு தன்னம்பிக்கை இல்லாததே காரணம்.பிரதமர் மோடியின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் தத்துவமே, முதலில், நாம் மனதளவில் தயாராக வேண்டும். நம்மாளும் உலக அளவில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, தரமான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த முடியும் என்ற உறுதியை ஏற்படுத்துவது; ஓங்கி உரக்க அடித்தால் போதும்; சாதிக்கலாம்.அதேபோல், தொழில் வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்களாக, உரிமம் பெறுவது, அரசு துறைகளை தொடர்பு கொள்வது, வழிமுறைகள், சட்டங்கள், அதிக மன அழுத்தம் தரும் ஆய்வுகள் என பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன.வெளிநாட்டு முதலீடுகளும், அதனால் தடைபடுகின்றன. பல துறைகளுக்கு அலைந்து, வெளிநாட்டில் பதிவு செய்து, இங்கு தொழிற்சாலை அமைக்கிறோம் என கூறுகின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தி, ஒவ்வொரு இந்தியனும் உற்பத்தி செய்யும் பொருட்கள், உலக அளவில் பிரபலமாவதற்கு, உறுதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். தொழில் துவங்குவதற்கு, தொழில் வளர்ச்சிக்கு ஏற்படும் அனைத்து தடைகளும் தகர்த்து எறியப்படும்.இதற்காக, பிரதமர் மோடி தலைமையில், வரும் 29ல், டில்லியில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழில் சார்ந்த அனைத்து துறை அமைச்சர்கள், செயலர்கள் பங்கேற்கின்றனர். அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்கள், தொழில் துறை செயலர்கள் பங்கேற்று, ஒரு நாள் முழுவதும் விவாதித்து, இறுதி முடிவு எடுக்க உள்ளோம்.ஒரு தொழில் துவங்குவதற்கு விண்ணப்பித்து விட்டு, அரசு துறைகளிடம் இருந்து 30 நாட்களுக்குள் உங்களுக்கு பதில் வரவில்லை எனில், அந்த தாமதமே, உங்களுக்கு அனுமதி வழங்குவதாக எடுத்துக் கொள்ளும் வகையிலான மாற்றங்கள் உருவாகும். பல பைல்கள், பல ஆவணங்கள், பல அரசு துறைகளுக்கு அலைய வேண்டிய நடைமுறைக்கு, அக்கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒரே காகிதத்தில், அனைத்து பணிகளும் முடியும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும்.'அனைத்து மாநிலங்களிலும், தொழில் வளர்ச்சி சமச்சீராக இருக்க வேண்டும்; பரவலாக்க வேண்டும். தொழில் வளர்ச்சி 8 சதவீதம், 10 சதவீதம் என இருந்தாலும், ஒரு மாநிலம் வளர்ச்சியடையா விட்டால் பலன் இருக்காது,' என, பிரதமர் மோடி அடிக்கடி கூறுவார். அதன் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தொழில் துறையை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வோம். சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளை பார்த்து பயப்பட வேண்டாம்; நாமும் சாதிப்போம்.இவ்வாறு, நிர்மலா சீதாராமன் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|