பதிவு செய்த நாள்
10 பிப்2016
15:42
பெங்களூரு: சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம், கோடிக்கணக்கான ரூபாய் கரும்பு பாக்கியை வாங்க முடியாமல், விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில், மழை பற்றாக்குறையால், கர்நாடக மாநிலத்தில், நடப்பாண்டு சர்க்கரை உற்பத்தியில், 10 லட்சம் டன் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கர்நாடகாவில் சர்க்கரை உற்பத்தி திருப்திகரமாக இருந்தது. 2015 - 16ல், 49.82 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவை அடுத்து, கர்நாடகா, மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மழை பற்றாக்குறையால், கரும்பு விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், 40 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதாக, விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
கடந்த ஆண்டு, மாநிலத்தில் போதிய மழை பெய்யாதது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது, 'லோட் ஷெட்டிங்' போன்ற பிரச்னையால் விவசாயிகள் பரிதவித்தனர். இதனால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடியை தவிர்த்து, மாற்று பயிர் செய்ய ஆர்வம் காட்டினர். கரும்பு சாகுபடி பரப்பளவும் வெகுவாக குறைந்தது. கரும்பு அதிகமாக பயிரிடப்படும் மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில், போதுமான அளவு மழை பெய்ததால், இந்த மாவட்டங்களில் கரும்பு விளைச்சல் திருப்திகரமாக உள்ளது.
பெலகாவி, பாகல்கோட்டை, பீதர் உட்பட, வட கர்நாடக மாவட்டங்களில், கரும்பு சாகுபடி குறைந்துள்ளது. இம்மாவட்டங்களில், கடந்த அக்டோபரில் இருந்து கரும்பு அரவை துவங்கியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, 1.97 கோடி டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. அரவை முடியும்போது, 3.4 கோடி டன் கரும்பு அரவை செய்யப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 4.5 கோடி டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.
கரும்பு விளைச்சல் குறைந்திருந்தாலும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள், வருத்தம் தெரிவித்துள்ளனர். கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதரவு விலையை அளிக்க வேண்டுமென்று, சர்க்கரை இயக்குனரகம், சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. டன் கரும்புக்கு, 2,300 ரூபாய் வழங்க வேண்டும். பெரும்பாலான சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், தங்கள் சொந்த செலவில், கரும்பை அறுவடை செய்து, ஆலைகளுக்கு எடுத்து செல்கின்றனர். கரும்புக்கான தொகையை விவசாயிகளுக்கு கொடுக்கும்போது, போக்குவரத்து செலவுடன், வெட்டுக்கூலியையும் சேர்த்து, ஒரு டன்னுக்கு, 400 - 500 ரூபாய் வரை பிடித்தம் செய்து கொள்வர்.
கடந்த சில ஆண்டுகளாக, மாநிலத்தில் சர்க்கரை உற்பத்தி அளவு, 40 லட்சம் டன்னுக்கும் அதிகமாகவே இருக்கும். இங்கு சராசரியாக, 25 லட்சம் டன் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள சர்க்கரை வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|